ட்ரம்ப்-க்கு கிண்டலாக பதிலடி கொடுத்த கமலா ஹாரீஸ்…!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் செனட் உறுப்பினராக இருக்கும் கமலா ஹாரிஸ், அதிபர் டொனால்டு ட்ரம்பின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வருபவர்.

ட்ரம்ப் கொண்டு வந்த அமெரிக்க குடியுரிமைக் கொள்கை, மெக்சிகோ சுவர் விவகாரம், வரிவிதிப்புக் கொள்கை ஆகியவற்றை எதிர்த்து செனட் சபையில் அவர் குரல் கொடுத்து வருகிறார்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக கமலா ஹாரிஸ் கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தார்.

இதையடுத்து அவரது தேர்தல் பிரசாரத்துக்காக உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் நன்கொடை வழங்கி வந்தனர்.

ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என கூறப்பட்டு வந்த நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று திடீரென அறிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டர் மூலம் தனது ஆதரவாளர்களுடன் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

அதில் தனது பிரசாரத்தை நிறுத்திக் கொள்வதாகவும், அனைத்து மக்களுக்கும் நீதி கிடைக்க தினமும் போராடுவேன் என்றும் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.

கமலா ஹாரீசை கடுமையாக விமர்சித்து வந்த ட்ரம்ப், இது பற்றி நாங்கள் உங்களை மிஸ் செய்வோம் என்று நக்கல் தொணியில் ட்வீட் செய்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த கமலா, கவலை வேண்டாம் அதிபரே, உங்களது விசாரணையில் சந்திப்போம் என்று கூறியுள்ளார்.

அதிபர் பதவியை தவறாக பயன்படுத்தியதாக ட்ரம்ப் விசாரணையை சந்தித்து வரும் நிலையில், அதனை வைத்து கமலா பதிலடி கொடுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே