மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சிலைகள் மாற்றப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ள அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளுக்கு மீண்டும் பணி வழங்கக்கூடாது என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் கும்பகோணம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதாடினார்.
திருச்சியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் திருமகள் தினமும் கையெழுத்திட்டு வருகிறார். இந்நிலையில் ஜாமீனுக்கான நிபந்தனையை தளர்த்தக் கோரியும், தனக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் திருமகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கு கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் நேரில் ஆஜராகி வாதாடினார்.
திருமகளின் ஜாமீனுக்கான நிபந்தனையை தளர்த்தக் கூடாது என்றும், அவருக்கு மீண்டும் பணி வழங்கக் கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கின் தீர்ப்பு மாலை வெளியாக வாய்ப்புள்ளது.