Zoom செயலி பாதுகாப்பானது அல்ல : உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

Zoom செயலி பாதுகாப்பானது அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

நிறுவன ஊழியர்கள் பலர் வீட்டிலிருந்தே தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவன ஊழியர்கள் பலர் பல்வேறு மொபைல் செயலி மூலமாக கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் ZOOM என்ற செயலின் பயன்பாடு தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதன்மூலமாக கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்து இதனை எளிதாகப் பயன்படுத்த முடியும்.

இதன்மூலமாக பலர் வீடியோ அழைப்பு மூலமாக ஒரே நேரத்தில் கலந்துரையாட முடியும்.

அரசு அலுவலக ஊழியர்கள்கூட இந்த செயலியைப் பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகின.

முக்கியமாக சென்னை உயர்நீதிமன்றத்தில்கூட இந்த செயலியைப் பயன்படுத்தி வழக்குகள் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் செயலியைப் பயன்படுத்தி 5 லட்சம் கணக்குகள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியானது.

இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி ‘ஸூம்’ செயலி பாதுகாப்பானது அல்ல என்றும் அதில் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே, இதனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே