மக்களின் நாகரிகத்தின் நிலை மொழி தான்!…
செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி,
தம் பொருள் வழாமை இசைக்கும் சொல்லே.”
(தொல்காப்பியம்:880)

தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் செந்தமிழ் நிலத்து மக்கள் என்று கூறி தமிழின் பழமைக்கும், தமிழரின் பெருமைக்கும் மகுடம் சூட்டியுள்ளார் புலவர் தொல்காப்பியர்.

மொழி எனப்படுவது ஒரு நாட்டில் வாழும் மக்களின் தொடர்புக்கு மட்டுமன்றி அவர்களின் நிலையும், மனதில் தோன்றும் எண்ணங்களையும் வெளிப்படுத்தும் ஆயுதமாகவே இருந்துள்ளது.

உள்ளத்து சிந்தனைகள் அனைத்தும் ஒவ்வொருவருக்குள்ளும் உருவாகுவது அவரவர் தாய் மொழியில் தான்.

மொழியின் தனித்தன்மைப் போற்றும் வகையிலும், பழமையை பாதுகாக்கும் வகையிலும் பிப்ரவரி 21 உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. 

1999 யுனெஸ்கோ மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி தாய்மொழி தினம் வருடாவருடம் உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகில் 6 ஆயிரம் மொழிகள் உள்ளன.

இதில் 1,500 மொழிகள் ஆயிரம் பேருக்கு கீழ் பேசுபவை.

3 ஆயிரம் மொழிகள் பத்தாயிரம் பேருக்கும் குறைவானோர் பேசுபவை.

தாய்மொழியில் யார் பேசினாலும் நம் தாயிடம் பேசியதைப் போல மட்டற்ற மகிழ்ச்சி நமக்குள் ஏற்படுகிறது!.

நம்மை இணைக்கவும், ஒருமைப்பட வைக்கவும், புரிய வைக்கவும் தாய்மொழி உதவுவதால் எமது மொழி தாய்க்கு நிகரானது என்று சொல்லப்படுகின்றது.

தாய் மொழியில் சிறந்து விளங்கும் மனிதரிடம் நுண்ணறிவு அதிகம் இருக்கும்.

மேலும், படைப்பாற்றல் மிகுந்து, உலகை புதுப்பார்வை கொண்டு அறியப்படுவார் என்று பாரசீக கவிஞர் உமர் கயாம் கூறிகிறார்.

ஒரு மனிதன் தன்னுடைய கருத்து மற்றும் உணர்வுகளை சக மனிதர்களிடம் மொழி மூலமாவே தெரிவிக்கிறான்.

உலகம் தோன்றியது முதல் இன்று வரை ஒருவருக்கொருவர் தங்களின் எண்ணத்தையும் தகவலையும் வெளிப்படுத்துவதற்காக ஆதி மனிதன் ஓவியத்தால் பேசி பின்னர் சமிக்ஞையாக உருமாறி அதுவே பின்னாளில் வாய்மொழியாக மாறியது.

ஓவியமும், சமிக்ஞையுமே மனிதனின் முதல் மொழி.

மனிதர்கள் தங்களின் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப தங்களின் தாய்மொழிக்கும் பரிணாம வளர்ச்சி தந்தார்கள்.

ஆதி மனிதர் தன் நாகரிக வாழ்கையை நகர்த்துவதில் மட்டும் முக்கியத்துவம் காட்டவில்லை. மொழிக்கும் அதன் வளர்ச்சிக்கும் பெரும்பங்கை செய்துள்ளார்கள்.

பின்பு நாள்டைவில் மொழிக்கு வடிவம் வகுத்து அதற்கு இலக்கணம் வகுத்து, பல இலக்கியங்களை உருவாக்கினர்.

உலகளவில் நூல்கள் பல இருக்கும் மொழிகளில் முன்னணியில் உள்ளது நம் தாய்மொழியாம் தமிழ்மொழி.

பின்னே நின்று என்னே பிறவிபெறுவது
முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே
(திருமந்திரம்:81)

பின்னால் தயங்கி நின்று மக்கள் மீண்டும் ஏன் பிறவியைப் பெறுகின்றனர்? முந்தைய பிறவிகளில் நன்கு முயன்று தவம் செய்யாத காரணத்தினால்!. நான் நல்ல தவம் செய்திருந்தேன்.

இறைவன் எனக்கு நல்ல பிறவி தந்தான்.

தன்னைப் பற்றித் தமிழில் நூல் செய்யப் பணித்து, எனக்கு நல்ல பிறவியும், அதற்குத் தேவையான ஞானத்தையும் நல்கினான் என் குரு சிவபெருமான் என்று திருமூலர் கூறுகிறார்.

வளர்ந்து வரும் நவீன நாகரிக உலகில் தாய் மொழியை தவிர்த்து பிற மொழி பேசும் நாகரிகம் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பிற மொழி பேசுவதில் தவறில்லை.

ஆனால், தமிழ்நாட்டில் உள்ளவர்களிடமே பிற மொழியில் பேசினால்தான் கெளரவம் என்று நினைக்கும் இளைய சமுதாயம் நாளை தாய் மொழியை மறந்தால் கூட ஆச்சரியமில்லை.

இன்றும் தமிழ் நாட்டில் பல தனியார் பள்ளியில் தமிழில் பேசினால் அபராதம் என்ற நிலையில் தான் உள்ளது.

நாகரிகம் மாறுவது அதன் பண்பு. ஆனால், நம் தாய் மொழியான தமிழை போற்றுவது நம் மாண்பு. சங்கம் வைத்து வளர்த்த தமிழ் மொழியை சங்கடமின்றி பேச பழக வேண்டும்.

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;”

என்ற பாரதியார் பாடலுக்கேற்ப பல நல்ல நூல்களை
தமிழில் மொழி பெயர்த்தால், நவீன உலகில் இருக்கும்
மக்கள் தமிழ் மொழி மீதும் கவனம் செலுத்துவார்கள்.

மனிதர்கள் தங்களது பாரம்பரிய அறிவினையும், பண்பாட்டினையும் நிலைநிறுத்திக் கொள்ள தங்களது தாய்மொழியினைக் காத்துக் கொள்வது அவசியம்.

தாய்மொழி காத்தல் நம் தலையாய கடமை என்ற தீப்பொறி நம் இளைய சமுதாயத்தின் உள்ளத்தில் பற்றிக்கொள்ள தேவையான பணிகளைச் செய்வதே தாய்மொழிக்கு நாம் ஆற்றும் சேவை.

உலக தாய்மொழி நாள் வரலாறு.!!

தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என போற்றப்படும் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட பெருமை தமிழனுக்கே உண்டு.

ஒருவருக்கு ஒருவர் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள உதவிய மொழி பின்னாளில் இனத்தின் அடையாளமாக மாறியது.

உலகில் சுமார் 6000 மொழிகள் உள்ளன. பல மொழிகள் அழிந்தும் சில அழிந்து கொண்டும் உள்ள நிலையில் அழிந்து வரும் மொழிகளை பாதுகாக்கவும் அவற்றின் வளர்ச்சிக்கு உதவவும் யுனெஸ்கோ அமைப்பு உலக தாய்மொழி தினத்தை 1999 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

தாயில்லாமல் நாமில்லை இந்தியா பல மொழிகள் பேசப்படும் நாடு. இதில் 23 சதவீதம் மக்கள் தமிழ் உள்ளடக்கிய திராவிட மொழியையே பேசுகின்றனர்.

மேலும் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக உள்ள 22 மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நாடு தமிழ்நாடு.

எவ்வளவு மொழி படித்தாலும் உணர்வுகள் முழுவதையும் தாய்மொழியால் மட்டுமே வெளிப்படுத்த முடியும். உலக மொழிகளில் ஆறு மொழிகள் மட்டுமே கலாச்சாரக் கூறுகளை உள்ளடக்கியதாக கருதப்படுகிறது.

கிரேக்கம் லத்தின் உள்ளிட்ட மொழிகள் அடங்கிய இந்த பட்டியலில் நமது தாய்மொழி தமிழுக்கு சிறப்பான இடம் உண்டு.

தொன்மையான மற்றும் பழமையான மொழிகள் பல அழிந்த நிலையில் நம் தாய்மொழி தமிழ் இப்பொழுதும் காலத்திற்கு ஏற்ப தன்னை மெருகேற்றிக் கொண்டு இளமையுடன் திகழ்கின்றது.

கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழிக்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செம்மொழி அந்தஸ்தை வழங்கி பெருமை சேர்த்தது.

தாய் மொழி கண் போன்றது, பிற மொழி கண்ணாடி போன்றது என்பது பழமொழி.

கண்ணாடிகளுக்காக கண்ணை இழக்காமல் வாழ்வது குறித்து வளரும் தலைமுறைக்கு வழிகாட்டுவோம் தாய்மொழியை போற்றுவோம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே