மக்கள் பாதுகாப்பாக ஓட்டளிக்க இயலும்வரை அதிபர் தேர்தலை தள்ளி வைக்கலாமே? என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி ஆலோசனை கூறியுள்ளார்,
அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
குடியரசுக் கட்சி வேட்பாளராக இரண்டாவது முறை களம் காணும் அதிபர் ட்ரம்ப்பை எதிர்த்து, ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜோ பைடன் போட்டியிட உள்ளார்.
இந்த தேர்தல் நடைமுறையில் ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளின் பாதிப்பு இருக்கலாம் என்று அதிபர் ட்ரம்ப் ஏற்கனவே சொல்லி வருகிறார்.
இந்நிலையில் மக்கள் பாதுகாப்பாக ஓட்டளிக்க இயலும்வரை அதிபர் தேர்தலை தள்ளி வைக்கலாமே? என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி ஆலோசனை கூறியுள்ளார்,
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர் பதிவுகளில் கூறியுள்ளதாவது:
கரோனா தொற்றின் காரணமாக தபால் ஒட்டு முறை அதிகமானால் அதன் காரணமாக தேர்தலில் நிறைய முறைகேடுகள் நடக்கவும், தவறான முடிவுகள் வெளிவரவும் வாய்ப்புள்ளது.
அப்படி ஒரு தேர்தல் நடந்தால் அதுதான் வரலாற்றிலேயே மோசமான தேர்தலாக அமையும். அந்நிய நாடுகள் இந்த முறையின் காரணமாக தேர்தல் நடைமுறையில் முறைகேடுகள் செய்ய வாய்ப்புகள் அதிகம்.
அத்துடன் தபால் ஒட்டுமுறை இதற்கு முன்பு முயற்சி செய்யப்பட்ட இடங்களில் பெரும் கஷ்டமாக முடிந்துள்ளது.
அப்படி நடந்தால் அமெரிக்காவிற்கும் அது மிக அவமானகரமானதாக அமையும். மக்கள் முறையாக, சரியாக மற்றும் பாதுகாப்பாக ஓட்டளிக்க முடியும் வரை அதிபர் தேர்தலைத் தள்ளி வைக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.