உடல்நிலை முற்றிலும் குணமடைந்ததை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 2ம் தேதி முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
14ம் தேதி கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.
தொடர்ந்து, ஆக.,17 அன்று, உடல் வலி மற்றும் லேசான மயக்கத்தால் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவரின் உடல்நிலை பற்றி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கான சிகிச்சை பிரிவில் அமித்ஷா அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை சீராக உள்ளது.
மருத்துவமனையிலிருந்தே தன் பணிகளை மேற்கொண்டு வருகிறார் என தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கான சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அமித்ஷா முற்றிலும் குணமடைந்துவிட்டார்.
அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.