முதல்வரும், துணை முதல்வரும் ராமர்-லட்சுமணர் போல புரிதல் உள்ளவர்கள் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை நடைபெற்றது.
இதன் பின் அதிமுக செயற்குழுக் கூட்டம் வருகின்ற 28-ஆம் தேதி காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை செயலகத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் நேற்று வருகையில், ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு பன்னீர்செல்வம் என்று பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கோஷமிட்டனர்.
அதேபோல் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வருகையில்,தமிழகத்தின் நிரந்தர முதல்வர் எடப்பாடியார் என அவரது ஆதரவாளர்கள் கோஷமிட்டனர்.
இதனால் அதிமுக தொண்டர்களின் முழக்கத்தால் மீண்டும் வெடித்தது முதல்வர் வேட்பாளர் சர்ச்சை.
இந்நிலையில் இன்று அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்பொழுது அவர் கூறுகையில், அனைவரும் கருத்து தெரிவிக்கவே அவசர கூட்டம் நடைபெற்றது.
அதிமுக அன்பு என்னும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது . ராமன் – லட்சுமணனுக்கு இடையே உள்ள புரிதல், பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே உள்ளது.
அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து பேசக்கூடாது என தலைமை அறிவித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.