68 நாட்களுக்கு பிறகு, தமிழகத்தில் ரயில் போக்குவரத்து நாளை மீண்டும் தொடங்குகிறது.
கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.
அதற்கு 2 நாட்களுக்கு முன்பே நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் நாளை முதல் ரயில் போக்குவரத்துக்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
முதற்கட்டமாக, மதுரை-விழுப்புரம், திருச்சி- நாகர்கோவில், காட்பாடி-கோயம்புத்தூர், கோயம்புத்தூர்-மயிலாடுதுறை மார்க்கங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.
மதுரையில் ரயில் நிலைய சந்திப்பில் உள்ள முன்பதிவு மையத்தில் 2 கவுண்டர்களில் மட்டுமே முன்பதிவு நடைபெற்றது.
ஒரு கவுண்டருக்கு 3 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
டிக்கெட் முன்பதிவு செய்ய வந்தவர்கள் முகக்கவசம் அணிந்திருப்பதும், சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதும் உறுதி செய்யப்பட்டது.
மேலும், ரயில்வே நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் கிருமிநாசினி வழங்கப்பட்டது.
திருச்சி ரயில் நிலையத்தில், டிக்கெட் முன்பதிவு செய்ய வந்தவர்கள் அனைவருக்கும் உடல் வெப்பப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
முக கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர், முன்பதிவு மையத்திற்குள் தனி மனித இடைவெளி விட்டு நிற்கும் வகையில் கோடுகள் வரையப்பட்டுள்ளன.
திருநெல்வேலியில், சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவுக்கு மக்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.
இதனால் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் முன் பதிவு செய்யும் இடம் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.