இன்றைய தேவை சுயகட்டுப்பாடுதான் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ..!!

தளர்வுகள் கொடுத்து விட்டதால், மக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம், இன்றைய தேவை சுய கட்டுப்பாடு தான் என முதல்வர் ட்விட்டரில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இன்றைய தேவை சுய கட்டுப்பாடு தான் எனும் தலைப்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கொரோனா பெருந்தொற்றில் இருந்து நாம் மீண்டு வருகிறோம். கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை முழுவதுமாக கடைபிடித்த தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களை தங்கள் உயிரைப் பணையம் வைத்து பாதுகாத்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நாளொன்றுக்கு தமிழகத்தில் 36 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த தொற்று பாதிப்பு தற்போது 4 ஆயிரத்திற்கும் கீழே குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதற்கு காரணம் முழு ஊரடங்கு, மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, மாநிலத்தில் மருத்துவத்தின் கட்டமைப்பு, துடிப்பான நிர்வாகம் ஆகியவை தான் எனவும் கூறியுள்ளார். மேலும் இன்றைய தகவல் அடிப்படையில் ஏராளமான படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாகவும், ஆக்சிஜன் படுக்கைகள், தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் ஏராளமாக இருப்பதாகவும் கூறிய அவர், எந்த அலையையும் தாங்க கூடிய வல்லமை இந்த அரசுக்கு உள்ளது எனவும் கூறியுள்ளார்.

இந்த நம்பிக்கை தமிழக மக்களுக்கும் உண்டு என்பதை தான் நம்புவதாகவும் கூறியுள்ளார். மேலும் நாட்டு மக்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்று தான். கொரோனாவை கட்டுப்படுத்தி விட்டோம் என்று சொல்லலாம். ஆனால் முழுமையாக ஒழித்து விட்டோம் என்று சொல்ல முடியாது. எனவே மக்கள் யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம். தளர்வுகள் அறிவித்து விட்டார்கள் அதனால் நாம் எந்த விதிமுறைகளையும் பின்பற்ற தேவையில்லை என மக்கள் நினைக்க வேண்டாம். இன்னும் பள்ளி கல்லூரிகள், அரசு சமுதாய விழாக்கள், திரையரங்குகள், பூங்காக்கள் ஆகியவை திறப்பதற்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை. ஏனென்றால் இவை அனைத்தும் மக்கள் அதிகமாக கூட கூடிய இடங்கள்.

உணவகம், கடைகள், பொதுப்போக்குவரத்து, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு அனுமதி கொடுத்ததற்கு காரணம் மக்களின் வாழ்வாதாரம் கருதி தான் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் மக்களின் வாழ்வாதாரம் முழு ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், மாநிலத்தின் பொருளாதாரம் பின்தங்கி உள்ளதாலும் தான் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கடைகள் அல்லது அலுவலகங்களுக்கு வெளியே கிருமி நாசினி மற்றும் உடல் வெப்ப பரிசோதனை கருவிகள் கொண்டு சோதனை செய்ய வேண்டும் எனவும், கடைகளுக்குள் ஒரே நேரத்தில் அதிகப்படியான மக்களை அனுமதிக்க கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் கொரோனா தொற்றுக்கான அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் எனவும், நீங்களே உங்களுக்கு தெரிந்த சிகிச்சை முறைகளை மேற்கொள்ள கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் தற்போது கொடுக்கப்பட்டவை அனைத்துமே சாதாரண கட்டுப்பாடுகள் தான். இவற்றை பின்பற்றி நடந்தால் தொற்று ஏற்படாமல் தடுக்கலாம். இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் அரசின் கட்டுப்பாடுகள் அல்ல, மக்கள் தங்களுக்கு தாங்களே போட்டுக் கொள்ளக்கூடிய சுய கட்டுப்பாடுகளாக மாற வேண்டும். அந்த அடிப்படையில் ஒவ்வொரு மனிதனும் தங்களுக்கு தாங்களே காவல் அரணாக இருக்க வேண்டும்.

மேலும், கட்டுப்பாட்டு விதிகள் மீறப்படும் பட்சத்தில் தான் மூன்றாம் அலை ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளதாகவும், எனவே கட்டுப்பாட்டு விதிகளை முறையாக பின்பற்றினால் எந்த அலையும் உள்ளே வரமுடியாது. எனவே மக்கள் எல்லோரிடமும் நான் கேட்டுக்கொள்வது தளர்வுகள் தரப்பட்டு விட்டது என்பதற்காக விதிமுறைகளை மீறி நடக்க வேண்டாம். விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் அமலில் தான் உள்ளது. விதிமுறைகளைப் பின்பற்றி மதியால் கொரோனாவை வெல்வோம். நம்மையும் காப்போம் நாட்டையும் காப்போம் என கூறியுள்ளார்.

இதோ அந்த வீடியோ,

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே