பரோட்டா என்பது தமிழர்கள், மலையாளிகள் மட்டுமல்லாமல் தென் இந்தியர்கள் அனைவரின் வாழ்வோடும், கலாச்சாரத்தோடும் பின்னிப் பிணைந்த ஒரு உணவாக உள்ளது.
அந்த பரோட்டாவுக்கு 18% சதவீத ஜிஎஸ்டி வரி கட்டவேண்டும் என்ற உத்தரவு ட்விட்டர் வாசிகளை கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
இதனால் #handsoffporotta (பரோட்டாவிலிருந்து கையை எடு)என்ற ஹேஷ்டேக் இன்று ட்விட்டரில் டிரெண்டானது.
பெங்களூரு வைட்பீல்ட் பகுதியைச் சேர்ந்த நிறுவனம் ஐடி பிரெஷ் ஃபுட்(ID Fresh Food).
இந்த நிறுவனம் இட்லி – தோசை மாவு, பரோட்டா, தயிர், பன்னீர் உள்ளிட்ட, வாங்கியபின் எந்த தயாரிப்பும் இல்லாமல் , அப்படியே சமைக்கும் உணவுப் பொருட்களை விற்பனை செய்துவருகின்றது .
அந்த நிறுவனம் கோதுமை பரோட்டா , மலபார் பரோட்டா போன்ற உணவுகளுக்கான ஜிஎஸ்டி வரி குறித்து , ஜிஎஸ்டி சம்பந்தமான புகார்களை விசாரித்து முடிவெடுக்கும் மத்திய அரசின் Authority for Advance Rulings அமைப்பிடம் வழக்கு தொடர்ந்தது .
அந்த வழக்கின் தீர்ப்பில் பரோட்டா என்பது , 18% சதவீத வரி விதிக்கப்படும் உயர்தர உணவு வகைகளில் ஒன்று என்றும்; அது 5% சதவீத வரி வசூலிக்கப்படும் ‘ பிளைன் சப்பாத்தி , ரொட்டி ‘ போன்ற வகைகளில் சேராது என்றும் தீர்ப்பளித்துள்ளது .
ஏற்கெனவே ‘ரொட்டிக்கு'(Indian Bread) 5% சதவீத வரிதான் வசூலிக்கப்படுவதால், ரொட்டியின் மற்றொரு வகையான பரோட்டாக்கும் அதையே வசூலிக்கவேண்டும் என்ற ஐடி புட் நிறுவனத்தின் வாதத்துக்கு ‘ரொட்டி’ என்ற வகைக்குள் பரோட்டா அடங்காது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரொட்டி என்றால் அதை நேரடியாக உண்ணமுடியும் என்றும் பரோட்டாவை சுட வைத்த பின்னேதான் உண்ணமுடியும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.