அமெரிக்காவில் டிக் டோக் செயலிக்குத் தடை விதிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் மிகவும் பிரபலமாகி வரும் சீன செயலியான டிக் டாக்கிற்கு கூடிய விரைவில் தடை விதிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சீன உளவுத் துறையால் டிக் டாக் செயலியில் இருக்கும் தகவல்கள் பயன்படுத்தப்படும் வாய்ப்புள்ளதாக அமெரிக்க அரசு தரப்பில் கூறப்பட்டதை அடுத்து டிரம்ப், இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், டிக் டோக் செயலியைப் பொறுத்தவரை, அதற்கு சீக்கிரமே அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
அமெரிக்க அரசு தரப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து, டிக் டோக் மீதும், அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் மீதும், சீன அரசுடன் தொடர்பு கொண்டள்ளுதாக குற்றம் சாட்டி வந்தனர்.
அதே நேரத்தில் பைட் டான்ஸ் நிறுவனம், இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளது.
டிரம்ப் தடை பற்றி மேலும் பேசும்போது, “சனிக்கிழமையான இன்றே இது குறித்தான உத்தரவைப் பிறப்பிக்க அவசரகால அதிகாரத்தைப் பயன்படுத்துவேன்.” என்றும் தெரிவித்துள்ளார்.
டிக்டாக் செயலிக்கு, உலகம் முழுவதும் சுமார் 100 கோடி பயனர்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் டிக்டோக் மொபைல் செயலியின் அமெரிக்க வர்த்தகத்தை மட்டும் வாங்க மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.