#AJITHLedDroneToFightCorona : நடிகர் அஜித் வழங்கிய கொரோனா தடுப்பு யோசனை!

சென்னையில் கொரோனா தடுப்பு பணி முயற்சிகளில் நடிகர் அஜித்தின் யோசனையும் முக்கிய பங்கு வகிப்பது தெரியவந்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது, தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

வைரஸ் பரவலை தடுக்க காவலர்கள், சுகாதாரப்பணியாளர்கள் என பலர் இரவும் பகலுமாக பணிபுரிந்து வருகின்றனர். அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகின்றன.

இதில் சிவப்பு மண்டல பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் யோசனையை நடிகர் அஜித் தான் வழங்கியதாக மருத்துவர் கார்த்திக் நாராயணன் தெரிவித்துள்ளார். 

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கார்த்திக் நாராயணன், சிகப்பு மண்டலங்களில் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசிகளை தெளிக்க நடிகர் அஜித்தின் தக்‌ஷா குழு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், திருநெல்வேலி மாவட்டத்திலும் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அஜித் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும், சென்னையில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நிறைய பங்காற்றி இருப்பதாகவும் மருத்துவர் கார்த்திக் நாராயணன் தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் ஆலோசகராக பயிற்சி வழங்கிய ‘தக்‌ஷா’குழு தமிழக அரசுடன் இணைந்து ட்ரோன் மூலம் சென்னையில் கிருமி நாசினிகளை தெளித்து வருகிறது.

இதனிடையே ட்ரோன்களின் திறனை அதிகரிக்க முடிவு செய்த தக்‌ஷா குழு அதற்காக பல்வேறு மாற்றங்களை ட்ரோன்களில் செய்துள்ளனர்.

அதன்படி 16 லிட்டர் அளவிற்கு கிருமி நாசினிகளை சுமந்து செல்லும் வகையில் தக்‌ஷா குழுவினர் மேம்படுத்தியுள்ளனர்.

இதன் மூலம் ஒரு ஏக்கர் நிலத்தில் 30 விநாடிகளில் கிருமி நாசினி தெளிக்க முடியும். இந்த மேம்படுத்தப்பட்ட ட்ரோன்களின் சோதனை ஓட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.

கொரோனா தடுப்பு பணியில் நடிகர் அஜித்தின் இந்த புதுவித யோசனை முக்கிய பங்கு வகிப்பதாக மருத்துவர் கார்த்திக் நாரயணன் தெரிவித்திருப்பதையடுத்து அவரது ரசிகர்கள் ட்விட்டரில் #AJITHLedDroneToFightCorona என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே