ஊரடங்குக்கு வாய்ப்பில்லை; கரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ளுங்கள்: டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர்

டெல்லியில் ஊரடங்கு விதிக்கப்பட வாய்ப்பில்லை. கரோனாவுடன் வாழ நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,500க்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து டெல்லியில் ஊரடங்கு விதிக்கப்படுமா என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “நிச்சயமாக ஊரடங்குக்கு வாய்ப்பு இல்லை. ஊரடங்கு குறித்து எந்தத் திட்டமும் இல்லை. கடந்த ஆண்டு கரோனா பரவியபோது ஊரடங்கு விதிக்கப்பட்டதற்குக் காரணம் இருந்தது. யாருக்கு அந்த வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்று தெரியாது. நீங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் 21 நாட்களுக்கு மூடினால் வைரஸ் பரவுவது நிறுத்தப்படும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. எனவே, ஊரடங்கை அறிவித்தோம். ஆனால், வைரஸ் பரவுவது நீங்கவில்லை. எனவே, கரோனாவுக்கு ஊரடங்கு நிச்சயம் தீர்வல்ல.

இது ஒரு தொடர்ச்சியான நோய் என்றும், உடனடியாக இது முடிவடையாது என்றும் மருத்துவ நிபுணர்கள் எங்களுக்கு முன்னரே தெரிவித்தனர். எனவே, நாம் கரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். எனவே தகுதியுடைவர்கள் உடனடியாக கரோனா தடுப்பு மருந்துகளைச் செலுத்திக் கொள்ளுங்கள்” என்று சத்யேந்தர் ஜெயின் தெரிவித்தார்.

மேலும், ”எதிர்காலத்திலும் கரோனா பரவல் தொடரும். எனவே நாம், கரோனா தடுப்பு விதிமுறைகளுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். முகமூடி அணிதல், சமூக இடைவெளி ஆகியவற்றை வாழ்க்கை முறையுடன் பழகிக்கொள்ள வேண்டும்” என்று சத்யேந்தர் ஜெயின் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே