கட்டுப்பாடுகளை தளர்த்தியது தமிழக அரசு – காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை

கொரோனா பாதிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை, வருகிற 17-ந்தேதி வரை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. அப்போது சில கட்டுப்பாடுகளையும் தளர்த்தியது.

இந்த நிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஏப்ரல் 27-ந்தேதி பிரதமருடன் காணொலி காட்சி மூலமாக நடத்தப்பட்ட கலந்தாய்வு கூட்டம் மற்றும் மாவட்ட கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்கள், பொது சுகாதார வல்லுனர்கள் ஆகியோருடன் அவ்வப்போது நடத்தப்பட்ட ஆலோசனை, நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கை, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுரை, எனது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்.

  • கொரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்காக, தமிழகத்தில் மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4-ந்தேதி (நாளை) முதல் 17-ந்தேதி நள்ளிரவு 12 மணி வரை சில வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது.
  • நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இல்லாமல் ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.

சென்னையில்…

சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் (கட்டுப்பாட்டு பகுதி தவிர) சில பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.

  • அதன்படி கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும்.
  • அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும்.
  • சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் ஆகியவை, சென்னை மாநகராட்சி ஆணையர் அல்லது மாவட்ட கலெக்டர் ஆய்வுக்குப்பின், சூழ்நிலைக்கேற்ப, 25 சதவீத பணியாளர்களுடன் (குறைந்தது 20 நபர்கள்) செயல்பட அனுமதிக்கப்படும். நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும்.
  • தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், 10 சதவீத பணியாளர்களை கொண்டு (குறைந்தது 20 நபர்கள்) செயல்பட அனுமதிக்கப்படும். நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும்.

அத்தியாவசிய பொருள் விற்பனை

  • அத்தியாவசிய பொருள் விற்பனை கடைகள், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் மின் வணிக நிறுவனங்கள் (இ காமர்ஸ்) ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நேரங்களில் செயல்படலாம்.
  • அனைத்து தனிக் கடைகள் (முடி திருத்தகங்கள், அழகு நிலையங்கள் தவிர) ஹார்டுவேர் (இரும்பு பொருட்கள்), சிமெண்டு, கட்டுமான பொருட்கள், சானிடரிவேர், எலெக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் தனிக் கடைகள், மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோக பொருட்கள், மின் மோட்டார், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட தனிக்கடைகள், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • பிளம்பர், எலெக்ட்ரீஷியன், ஏ.சி. மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள், சிறப்புத் தேவைகள் உள்ளோருக்கான உதவியாளர்கள், வீட்டு வேலை பணியாளர்கள் ஆகியோர், சென்னை மாநகராட்சி ஆணையர் அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டரிடம் உரிய அனுமதி பெற்று பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.

மற்ற பகுதிகள்

சென்னை தவிர மற்ற பகுதிகளில் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) அனுமதிக்கப்படும் பணிகள் வருமாறு:-

  • 50 சதவீத பணியாளர்களை கொண்டு (குறைந்தபட்சம் 20 நபர்கள்) மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு வெளியிலுள்ள பகுதிகளில், அதாவது ஊரக மற்றும் பேரூராட்சி பகுதிகளில், உள்ள அனைத்து தொழிற்சாலைகள் (ஜவுளித்துறை உள்பட) செயல்பட அனுமதிக்கப்படும்.
  • 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள பேரூராட்சிகளில் மட்டும், மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து, சூழ்நிலைக்கேற்ப, ஜவுளித்துறை நிறுவனங்களை 50 சதவீத பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கலாம்.
  • தொழில் நகரியங்கள், தொழிற்பேட்டைகள் உள்ள ஊரகம், நகரங்களில் 50 சதவீத பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கலாம். நகர பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகளில், ஜவுளித்துறை நிறுவனங்கள் இயங்க அனுமதி இல்லை.

ஏற்றுமதி நிறுவனங்கள்

  • நகர பகுதிகளில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், கலெக்டர் ஆய்வு செய்து சூழ்நிலைக்கேற்ப 50 சதவீத பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.
  • மின்னணு வன்பொருள் உற்பத்தி 50 சதவீத பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.
  • கிராமப்புறங்களில் உள்ள ஒருங்கிணைந்த நூற்பாலைகள் (ஷிப்ட் முறையில் சமூக இடைவெளியுடன்) 50 சதவீத பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.
  • நகர பகுதிகளில் உள்ள தோல் பொருட்கள் மற்றும் ஆடை ஏற்றுமதிக்கான டிசைனிங் மற்றும் சாம்பிள்கள் உருவாக்க பணி, கலெக்டர் ஆய்வு செய்து, 30 சதவீத பணியாளர்களை கொண்டு அனுமதிக்கப்படும்.
  • தகவல் தொழில்நுட்ப பணிகள், 50 சதவீத பணியாளர்கள், குறைந்தபட்சம் 20 நபர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.
  • நகர்ப்புறங்களில் கட்டுமான பணியிடத்திலேயே பணியாளர்கள் இருந்தால் மட்டும் அனுமதிக்கப்படும். பணியாளர்களை ஒருமுறை மட்டும் வேறு இடத்தில் இருந்து அழைத்துவர அனுமதிக்கப்படும்.
  • அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும்.
  • பிளம்பர், எலெக்ட்ரீஷியன், ஏ.சி. மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள் அனைவரும் கலெக்டரின் அனுமதி பெற்ற பின்னர் அனுமதிக்கப்படுவர்.

செல்போன் கடைகள்

  • மாற்றுத்திறனாளிகள், முதியோர், நோயாளிகள் ஆகியோரின் சிறப்பு தேவைகளுக்கான உதவியாளர்கள், வீட்டு வேலை பணியாளர்கள், கலெக்டரின் அனுமதி பெற்று பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.
  • அச்சகங்கள் செயல்படலாம்.
  • கட்டுமான பணிகளுக்கு தேவையான ஹார்டுவேர் (இரும்பு), சிமெண்ட், கட்டுமான பொருட்கள், சானிடரிவேர், மின் சாதன விற்பனை கடைகள், காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். கட்டுமான பொருட்களை எடுத்துச்செல்ல எந்தவித தடையும் இல்லை.
  • செல்போன், கணிப்பொறி, வீட்டு உபயோகப் பொருட்கள், மின் மோட்டார் ரிப்பேர், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட அனைத்து தனிக்கடைகள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • கிராமப்புறங்களில் உள்ள அனைத்து தனிக்கடைகள், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

உணவகங்கள்

  • உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம். மின் வணிக நிறுவனங்கள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டவாறு செயல்படலாம்.
  • நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள ‘மால்’கள் என்ற வணிகப்பகுதி மற்றும் வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து தனிக்கடைகள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட சூழ்நிலைக்கேற்ப கலெக்டர்கள் அனுமதிக்கலாம்.

அனைத்து கலெக்டர்களும், மாநகராட்சி ஆணையர்களும் அரசால் அறிவுறுத்தப்பட்ட தனிநபர் இடைவெளியை பின்பற்றியும், போதுமான கிருமிநாசினிகளை பயன்படுத்தியும், பணியாளர்கள், மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதை கண்காணிக்கவும், அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை தீவிரமாக கடைபிடிப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

ஊரடங்கு உத்தரவு தொடர்வதால் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடாமல் இருப்பதை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

ஏற்கனவே அரசால் அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள வேளாண்மைப் பணிகள், வேளாண் சார்ந்த தொழில்கள், தொழில் மற்றும் வணிக செயல்பாடுகளும், மருத்துவப் பணிகள் மற்றும் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் துறைகள், வங்கிகள், அம்மா உணவகங்கள், ஏ.டி.எம்., ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவை எவ்வித தங்குதடையின்றி தொடர்ந்து முழுமையாக செயல்படலாம்.

தொழில் நிறுவனங்கள்

கனிமம் மற்றும் சுரங்கப் பணிகள், கட்டுமானப் பணிகளுக்கு தேவையான பொருட்களை வழங்கும் செங்கல் சூளைகள், கல் குவாரிகள், எம்சாண்ட், கிரஷர்கள் மற்றும் இவற்றிற்கான போக்குவரத்து செயல்படலாம்.

பெரும் தொழிற்சாலைகளும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், கட்டுமான பணிகளுக்கும், பணிகளை தொடங்க கலெக்டர் அல்லது சென்னை மாநகராட்சி ஆகியோரிடம் இணைய வழியில் விண்ணப்பித்து பணியாளர் மற்றும் வாகனங்களுக்கு அனுமதி சீட்டுகள் பெற வேண்டும்.

நகர பகுதிகளில் பணியாளர்களை நிறுவனங்கள், தாங்கள் இயக்கும் பிரத்யேக பேருந்துகள், வேன்கள் மூலம் பணிக்கு அழைத்து வரலாம். அந்த வாகனங்களில் 50 சதவீதம் அளவிற்கு மட்டுமே தனிநபர் இடைவெளியை கடைபிடித்து அழைத்து வர வேண்டும்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், கிராமப்புற தொழில்கள், தனிக்கடைகள் ஆகியவை செயல்பட தனி அனுமதி தேவையில்லை. மத்திய அரசு மற்றும் மாநில அரசு அலுவலகங்கள், 33 சதவீத பணியாளர்களுடன் தொடர்ந்து செயல்படும்.

தடைகள் தொடரும்

ஏற்கனவே நடைமுறையில் உள்ள சில செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து அமலில் இருக்கும். அவை வருமாறு:-

  • பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள்.
  • வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.
  • திரையரங்குகள், கேளிக்கைக்கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற இடங்கள்.
  • அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.
  • பொது மக்களுக்கான விமான, ரெயில், பொது பேருந்து போக்குவரத்து; டாக்சி, ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா, மெட்ரோ ரெயில், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து.

6-ந்தேதி முதல்…

  • மாநிலங்களுக்கு இடையேயான பொது மக்கள் போக்குவரத்து, தங்கும் விடுதிகள் (பணியாளர் விடுதிகள் தவிர), தங்கும் ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் ஆகியவற்றுக்கான தடை தொடரும். இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது. திருமண நிகழ்ச்சிகளுக்கு, தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும்.

அரசு வழங்கியுள்ள இந்த நடைமுறைகளை பின்பற்றி கலெக்டர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, தொழிற்சாலைகளுக்கு தக்க அனுமதி வழங்கி, 6-ந்தேதி முதல் தொழிற்சாலைகள் செயல்பட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள். நோய்த் தொற்று குறையக்குறைய, தமிழ்நாடு அரசு மேலும் பல தளர்வுகளை அறிவிக்கும்.

இந்த நடவடிக்கைகளுக்கு அனைவரும் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே