பொது முடக்கக் காலத்தில், விதிமுறைகளை மீறியதாக புலம்பெயர் தொழிலாளர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அனைத்தையும் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
அதில், மீண்டும் பணிக்குத் திரும்ப விரும்பினால் புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
சொந்த மாநிலங்களுக்கு செல்ல விரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களைக் கண்டறிந்து 15 நாள்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்ய இலவச ஆலோசனை மையத்தை மத்திய, மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.