புகாரளிக்கச் சென்ற பெண்ணை 3 நாட்கள் வைத்து சீரழித்த துணை காவல்துறை ஆய்வாளர்..!!

ராஜஸ்தான் மாநிலத்தில், காவல் நிலையத்துக்குப் புகாரளிக்கச் சென்ற பெண்ணைத் துணை காவல்துறை ஆய்வாளர் மூன்று நாட்கள் அடைத்து வைத்துப் பாலியல் வன்புணர்வு செய்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் 2 ஆம் தேதி, ராஜஸ்தான் மாநிலத்தின், அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கும் தன்னுடைய கணவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக புகாரளிக்க காவல்நிலையம் சென்றுள்ளார். 

அந்தப் புகாரை அளிப்பதற்காக, அங்கிருந்த துணை காவல் ஆய்வாளரை அந்தப் பெண் தொடர்பு கொண்டுள்ளார்.

இந்நிலையில், ஐம்பது வயது மதிக்கதக்க அந்தக் காவல் நிலையத்தின் துணை காவல் ஆய்வாளர் அந்தப் பெண்ணை மூன்று நாட்கள் (மார்ச் 2 முதல் மார்ச் 4 வரை) அடைத்து வைத்துப் பாலியல் வன்புணர்வு செய்ததாக தெரியவந்துள்ளது.

அந்தக் காவலர் தங்கியிருந்த காவல்நிலைய வளாகத்திலேயே இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி சிங்கின் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவரைப் பணிநீக்கம் செய்வதோடு, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு செல்ல மறுப்பதால் விசாரணை நீளுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே