மாணவர்கள் படிக்கட்டில் பயணம் – போக்குவரத்துத் துறை எச்சரிக்கை..!!

பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகள் மற்றும் ஜன்னல் கம்பிகளை பிடித்துக்கொண்டு தொங்கியபடியும் பயணம் செய்யும் வீடியோக்கள் சமூக வலை தளங்களில் அதிகம் வெளியாகின்றன.

சமீபத்தில் திருவள்ளூர் மெய்யூர் பகுதியில் அரசுப் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி சாகசம் மேற்கொண்ட பள்ளி மாணவர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த மாணவர்களை அடையாளம் கண்ட பெரியபாளையம் காவல் துறையினர் மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்ய போது ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு போக்குவரத்து துறை சில அறிவுரைகளை வழங்கியிருக்கிறது.

  • மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
  • பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பான முறையில் பேருந்தில் ஏறி இறங்குவதை உறுதி செய்த பின்பே பேருந்துகளை இயக்க வேண்டும்.
  • பள்ளி கல்லூரிகள் மற்றும் அனைத்து நிறுத்தங்களிலும் பேருந்தை நிறுத்தி அனைவரையும் ஏற்றிச் செல்ல வேண்டும்.
  • மாணவர்கள் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்யாதவாறு ஓட்டுனரும், நடத்துனரும் பணியாற்ற வேண்டும்.
  • பேருந்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், கூடுதல் பேருந்துகள் இயக்க போக்குவரத்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே