ஊழல் செய்யும் அரசு அதிகாரிகள், ஊழல் செய்து சம்பாதித்த சொத்துடன், அவர்களது மொத்த சொத்துகளையும் பறிமுதல் செய்க என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அரசு ஊழியர் என்பதை மறைத்து இலவச வீட்டு மனைப்பட்டா பெற்றது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசு ஊழியர் என்பதை மறைத்து இலவச வீட்டு மனைப்பட்டா பெற்ற அரசு ஊழியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பபட்டது.

அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், அவர் மீது புகார் அளிக்கப்பட்டு ஏன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஊழல் செய்து சேர்த்த சொத்துகளுடன், அவர்களது மொத்த சொத்துகளையும் சேர்த்து பறிமுதல் செய்ய வேண்டும்.

மக்களுக்கு இடையூறு செய்வது அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி, அரசு ஊழியர்களாக இருந்தாலும் சரி அவர்கள் சமூகத்துக்கு எதிரானவர்களே.

அரசு ஊழியர்களுக்கு ஏன் சங்கங்கள்? அவற்றை அமைக்க யார் அதிகாரம் கொடுத்தது? என்றும் நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர். மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள் முறையாக தங்களது பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே