தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்படும் மெகா கரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சுகாதாரத் துறை சாா்பில் தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் மெகா கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் கடந்த 12-ஆம் தேதி 40 ஆயிரம் மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.

அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த தமிழக அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. அதற்காக, வாரம் ஒருமுறை இதுபோன்ற சிறப்பு முகாமை நடத்த திட்டமிட்டுள்ளது.

அதன்படி, இரண்டாவது கட்டமாக, இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 20 ஆயிரம் மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்காக, 17 லட்சம் எண்ணிக்கையிலான கோவேக்ஸின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து வழங்குகிறது.

கரோனா மூன்றாவது அலை எச்சரிக்கை இருப்பதாலும், கேரளாவில் தினசரி தொற்று அதிகரித்துள்ளதாலும் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே