விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் பழனிசாமி

பணியின்போது உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த திரு. சேட்டு என்பவர், ஓசூர் போக்குவரத்து
காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்தார்.

அவர் 7.5.2020 அன்று தமிழ்நாடு- கர்நாடகா எல்லையில் உள்ள ஜூஜூவாடியில், கரோனா வைரஸ் தொற்று தடுப்புக்காக அமைக்கப்பட்ட சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த போது, சென்னையிலிருந்து அகமதாபாத்திற்கு சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது, பின்னால் வந்த டிப்பர் லாரி தனது கட்டுப்பாட்டை இழந்து வேகமாக மோதியதால், கண்டெய்னர் லாரி அங்கிருந்த தடுப்பின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.

அப்போது தடுப்பின் மறுபுறம் இருந்த தலைமைக் காவலர் சேட்டு பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

பணியின் போது உயிரிழந்த தலைமைக் காவலர் சேட்டுவை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சேட்டு அவர்களின் குடும்பத்திற்கு சிறப்பினமாக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், அன்னாரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப்பணி வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே