கேரளத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக பெய்த தொடர் கனமழையால் இடுக்கி மாவட்டம் ராஜமாலா பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் அப்பகுதியில் பணியாளர் முகாமில் தங்கியிருந்த 80-க்கும் அதிகமான தொழிலாளர்கள் மண்சரிவில் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதில் சிக்கி இதுவரை 15 பேர் உயிரிழந்த நிலையில் 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதேபோன்று நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
நிலச்சரிவில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களின் முழு மருத்துவ செலவையும் அரசே ஏற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மீட்பு பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் மாநில காவல்துறையும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
இரவிலும் மீட்பு பணிகளை தொடர்ந்து தொய்வின்றி செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.