இந்தியன்-2 படப்பிடிப்பில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிதியுதவி – ஷங்கர்

இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்த விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கு இயக்குநர் ஷங்கர் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், விபத்து தந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை என்றும்; எவ்வளவு பாதுகாப்பும் முன்னேற்பாடுகள் செய்திருந்தும் எதிர்பாராத வகையில் நிகழ்ந்த விபத்தை ஜீரணிக்க முடியாமல் தவிப்பதாக கூறியுள்ளார்.

மயிரிழையில் தாம் உயிர் பிழைத்த உணர்வை விட, அவர்கள் உயிரிழந்துவிட்டார்களே என்ற வேதனை வாட்டி எடுப்பதாக குறிப்பிட்டுள்ள இயக்குநர் ஷங்கர், விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினரின் கஷ்டங்களை பார்க்கும் போது, கிரேன் தன் மீது விழுந்திருக்க கூடாதா என தோன்றுகிறது என கூறியுள்ளார்.

உயிரிழந்த கிருஷ்ணா, மது, சந்திரன் ஆகியோரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் அவர் தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே