டிக் டாக் புகழ் ‘ரவுடி பேபி சூர்யா’ தற்கொலை முயற்சி செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் செட்டிபாளையம் அடுத்த அய்யம்பாளையம் அருகே உள்ள சபரி நகரைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவர் சமூக வலைதளமான டிக்டாக்கில் சூர்யா என்ற பெயரில் மிகவும் பிரபலமானவர். இவரது வீடியோக்களில் முரட்டுத்தன சுபாவங்களை வெளிப்படுத்துவதால் ‘ரவுடி பேபி சூர்யா’ என அழைக்கப்பட நாளடைவில் அதனையே தனது பெயராக மாற்றினார் சூர்யா.
இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து சூர்யா, கோவை விமான நிலையத்திற்கு வந்தார் அங்கே அவருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு திருப்பூருக்கு 16ம் தேதி வந்தடைந்தார்.
சிங்கப்பூரில் இருந்து இவர் வந்ததால் பீதி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கும் சுகாதாரத் துறையினருக்கும் தகவல் அளித்தனர். தொடர்ந்து இவரை அதிகாரிகள் அழைத்துச் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர் மேலும் இவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர் என்ற நோட்டீஸையும் ஓட்டிச் சென்றனர்.
இந்நிலையில் சூர்யா இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார் இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவரை கொரோனா சிறப்பு தனிமைப்படுத்தும் வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.