பூஜை பண்டிகையையொட்டி, மேற்குவங்க மாநிலம் டார்ஜீலிங்கில் இந்திய ராணுவத்தின் ஆயுதங்களுக்கு பூஜை செய்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழிபாடு நடத்தினார்.

நவராத்திரி விழாவின் ஒரு அங்கமான ஆயுத பூஜை, நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் மேற்குவங்கம், சிக்கிம் மாநிலங்களில் உள்ள இந்திய ராணுவத்தின் தயார்நிலை குறித்து ஆய்வு செய்ய 2 நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டார்ஜீலிங்கில் உள்ள சுக்னா போர் நினைவிடத்துக்கு சென்றார்.

அங்கு ஆயுத பூஜையையொட்டி வைக்கப்பட்டு இருந்த இயந்திர துப்பாக்கிகள், சிறிய ரக பீரங்கிகள், போபர்ஸ் பீரங்கி, பினகா ராக்கெட் லாஞ்சர் சாதனம் உள்ளிட்டவற்றுக்கு சாஸ்திரா பூஜை எனும் சிறப்பு பூஜையை செய்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழிபாடு நடத்தினார்.

இதேபோல் அங்கு வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளை கையில் எடுத்தும் ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய ராணுவ தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நராவனே உள்ளிட்ட ராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதேபோல் சிக்கிம் சென்று அங்கும் ராணுவ ஆயுதங்களுக்கு ராஜ்நாத் சிங் சிறப்பு பூஜை செய்யவுள்ளார்.

பின்னர் சீனா எல்லை அருகே சிக்கிமில் உள்ள செராதாங் பகுதியில் ராணுவத்தினருடன் ஆயுத பூஜையை பாதுகாப்பு அமைச்சர் கொண்டாடவுள்ளார்.

கடந்த ஆண்டு ஆயுத பூஜை தினத்தன்று ரபேல் போர் விமானங்களை முறைப்படி பிரான்ஸ் நாட்டிடம் இருந்து பெறுவதற்காக ராஜ்நாத் சிங், அந்நாட்டுக்கு சென்றிருந்தார்.

அப்போது பிரான்சின் துறைமுகநகராக போர்டியக்சில் (Bordeaux) சாஸ்திரா பூஜையை செய்து அவர் வழிபாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே