இயல்பு நிலைக்கு திரும்பும் புதுச்சேரி..!!

புதுவை மாநிலத்தில் மேலும் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் செவ்வாய் காலை 9 மணி முதல் அமலுக்கு வந்ததால், அனைத்துவித கடைகளும், மதுக்கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.

புதுவை மாநிலத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த மே 10ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

இந்த பொதுமுடக்க கட்டுப்பாடுகள் ஜூன் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. திங்கள்கிழமையோடு(ஜூன்7) பொது முடக்க கட்டுப்பாடு அவகாசம் முடிந்த நிலையில், புதுவை மாநிலத்தில் கரோனா தொற்றும், உயிரிழப்பும் குறைந்து வருவதால், பொதுமுடக்க கட்டுப்பாடுகளில் மேலும் சில தளர்வுகளை அறிவித்து, ஜூன் 14-ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து, அரசு திங்கள் கிழமை நள்ளிரவு உத்தரவிட்டது.

இதன்படி, வழக்கம் போல் காலை 5 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை இயங்கிய காய்கறி, மளிகை, பால், மருந்துப் பொருட்கள் அடங்கிய அத்தியவசிய கடைகள் செவ்வாய்க்கிழமை முதல் மாலை 5 மணி வரை இயங்குவதற்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளன.

பிற அனைத்து வித கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. வழக்கம்போல் அத்தியவசிய பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.

பேருந்துகள், கார், ஆட்டோ உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து கரோனா விதிகள் படி மாலை 5 மணி வரை இயங்கலாம் என அறிவிக்கப்பட்டதால், பேருந்துகள் இயக்கம் தொடங்கின, அனைத்து வித கடைகளும் திறக்கப்பட்டுள்ளன, மதுக் கடைகளும் நீண்ட நாள்களுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளன.

கடற்கரை சாலையில் காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை அனுமதிக்கப்பட்டதால், ஏராளமானோர் நடை பயிற்சி மேற்கொண்டனர்.

அத்தியாவசிய அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

தேனீர் கடைகள், உணவகங்களும் திறக்கப்பட்டு பார்சல் மட்டும் வழங்கப்படுகிறது. இவைகள் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்படும்.

ஏற்கனவே மதுக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வித சில்லரை மதுக்கடைகளும் திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டதால், காலை 9 மணி முதல் மதுக்கடைகள் திறந்து இயங்குகிறது.

புதுவை மாநிலத்தில் புதிய தளர்வுகளால் இயல்பு நிலைக்குத் திரும்புகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே