பாகிஸ்தான் அத்துமீறல் : இந்திய ராணுவ வீரர்கள் மூன்று பேர் வீரமரணம்..!!

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் வெள்ளிக்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூவர் பலியாகியுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது.

வெள்ளிக்கிழமை பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சாவ்ஜியன், கெரன் உள்ளிட்டப் பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானின் இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் பலியானதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் எல்லைப் பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் மற்றும் குழந்தை உள்ளிட்ட 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் சிகிச்சைக்காக அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நடந்த தாக்குதலில் மூன்று இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

உரி பகுதியில் நடந்த தாக்குதலில் இரண்டு வீரர்களும், குரேஸ் பகுதியில் நடந்த தாக்குதலில் ஒரு வீரரும் வீரமரணமடைந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் 8 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் உறுதி செய்துள்ளது.

இந்தத் தாக்குதலால் எல்லைப் பகுதியில் பதற்றம் நீடித்துவருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே