மதுரை மாவட்டத்தில் 200 பள்ளிக்கட்டடங்களை இடிக்க உத்தரவு..!!

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நெல்லையில் நேற்று பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் உயிரிழந்த விவகாரம்.

நெல்லையில் பொருட்காட்சி திடல் அருகே உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்த. காயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் ஆபத்தான நிலையில் இருக்கக்கூடிய வகுப்பறை கட்டடங்களை இடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. இதற்காக, மாவட்டத்தோறும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஆய்வு மேற்கொண்டு, கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.

மேலும் நேற்று 38 மாவட்டங்களில், பள்ளி கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்ய 19 கல்வி அலுவலர்களை நியமித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் சேதமடைந்த 200 பள்ளி கட்டடங்களை இடிக்க மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி சேதமடைந்தததாக அடையாளம் காணப்பட்டுள்ள 120 வகுப்பறை கட்டடங்கள் மற்றும் 80 கழிவறை கட்டங்களை இடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், பழுதான கட்டடங்களுக்கு அருகே மாணவர்கள் செல்வதை தடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே, புதுக்கோட்டையில் 100 பள்ளி கட்டடங்களை இடிக்க அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே