மாணவர்கள் கூடுதலாக ஒரு மொழியை கற்க ஆர்வமாக இருப்பதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதும் புதிய கல்விக்கொள்ளை 2020 -ஐ அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், புதிய கல்வி கொள்கைக்கு தமிழகத்தில் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளன. மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு அனுமதி இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இருமொழி கொள்கை மட்டுமே பின்பற்றப்படும் என அறிவித்தார்.
இந்த நிலையில், கூடுதலாக ஒரு மொழியை கற்கும் வாய்ப்பை தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே இழக்கிறார்கள் என மாநில பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
” புதிய கல்வி கொள்கை ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை உலக தரத்திலான கல்வியை வழங்க இருக்கிறது. மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி நிலையங்கள் என கல்வித்துறையின் அனைத்து பிரிவுகளும் மேம்பட இருக்கின்றன.
தமிழகத்தில் சிபிஎஸ்சி, மெட்ரிகுலேசன் பள்ளிகளில் பல்வேறு மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. கூடுதலான மொழியை கற்கும் வாய்ப்பு அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டும் தான் இழக்கின்றனர். 1968ம், 2020ம் வாழ்வியல் முறையில் பார்க்கும்போது ஒரே முறையில் இருக்கிறதா? காலம் மாறவில்லையா? கருத்துக்கள் மாறவில்லையா? .
தமிழக மாணவர்கள் மூன்றாவதாக ஒரு மொழியை , இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று பயிலும் வாய்ப்பை பெறுகிற போது, தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில் உள்ள மாணவர்கள் தமிழை மூன்றாவது மொழியாக எடுத்துப் படிக்கும் வாய்ப்பை நாம் புறக்கணிக்கிறோமா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்” என தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.