ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இரு ஆண் செவிலியர்கள் இடமாற்றப்பட்டதைக் கண்டித்து மற்ற செவிலியர்கள் வெள்ளிக்கிழமை திடீரென பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஆண் செவிலியர்கள் உள்ளிட்ட 120 செவிலியர்கள் பணியில் உள்ளனர்.
கரோனா சிகிச்சைப் பிரிவு உள்ளிட்டவற்றில் பணிபுரிந்துவரும் செவிலியர்களுக்கு தரமான உணவு, தங்குமிடம் ஆகியவற்றை வலியுறுத்தி வந்தனர்.
இதற்கிடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு உணவு ஒவ்வாமையால் 5 செவிலியர்கள் திடீரென மயக்கமடைந்து சிகிச்சையில் சேர்க்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.
புகாரைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் விசாரணை நடத்தியது. விசாரணை அறிக்கை அடிப்படையில் மாநில சுகாதாரத்துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் உள்ள ஆண் செவிலியர்கள் சி.கோபாலகிருஷ்ணனை திருவாடானை மருத்துவமனைக்கும், வி.மோகன்தாûஸ ராமேஸ்வரம் மருத்துவமனைக்கும் இடமாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளது.
கரோனா பரவல் தடுப்பு காலத்தில் இரு செவிலியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 50 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் திடீரென வெள்ளிக்கிழமை காலையில் பணியைப் புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் நின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
செவிலியர்கள் பணிபுறக்கணிப்பு குறித்து செவிலியர்கள் சங்க மாவட்ட நிர்வாகி வீரம்மாள் கூறுகையில், அடிப்படை வசதி கோரும் எங்களை பழிவாங்குவது போல இடமாறுதல் செய்வது சரியல்ல.
இடமாறுதல் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்யாவிடில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்போம் என்றார்.
செவிலியர்களுடன் மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.