தடுப்பூசி போட்டு கொண்ட பின் ஏற்படும் கொரோனா தொற்றால் உயிரிழப்புகள் இல்லை – எய்ம்ஸ் தகவல்..!!

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்ட பின்னர் கோவிட் -19 தொற்று ஏற்பட்ட மக்கள் யாருமே இறக்கவில்லை என்று எய்ம்ஸ் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்றின் இரண்டாவது அலையில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே எவ்வளவு விரைவாக தடுப்பூசி போட்டு கொள்ள முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போட்டு கொள்ளுங்கள் என்பதையே மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்ட பின்னர் கோவிட் -19 தொற்று ஏற்பட்ட மக்கள் யாருமே இறக்கவில்லை என்று அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்றுக்கு எதிராக 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டவர்கள், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி அதனால் உயிரிழந்துள்ளார்களா என்பது பற்றி நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட பின்னர் ஒருவருக்கு கோவிட் -19 இருப்பது கண்டுபிடிக்கப்படுவது breakthrough infection என்று வரையறுக்கப்படுகிறது.

அமெரிக்கநோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (Centers for Disease Control and Prevention) கூற்றுப்படி, “முழுவதும் தடுப்பூசி போடப்பட்ட ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்கள் தொற்றால் நோய் வாய்ப்படுகிறார்கள், மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள், அதில் சிலர் தீவிர கோவிட் -19 தொற்றால் இறக்க நேரிடும்” என்பதாகும். இதனிடையே எய்ம்ஸ் நடத்திய ஆய்வில் அதிர்ஷ்டவசமாக கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு ஏற்பட்ட தொற்று பாதிப்பால் யாரும் பலியாகவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

உருமாறிய கொரோனா வைரஸான B.1.617.2 மற்றும் B.1.1.7 ஆகியவற்றால் டெல்லியில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் மேற்கண்ட 2 வைரஸ்களுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகிறது, எவ்வாறு மரபணு வரிசையை பயன்படுத்துகிறது என்பதைப் பற்றி ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வில் தடுப்பூசி செலுத்தி கொண்ட பின்னும் தொற்றுக்கு ஆளான 63 பேர் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டனர். இதில் 36 பேர் கோவிட் -19 தடுப்பூசியின் 2 டோஸ்களையும் போட்டு கொண்டவர்கள்.

மீதமுள்ள 27 பேர் குறைந்தது ஒரு டோஸைப் பெற்றவர்கள் ஆவர். இவர்களில் 41 பேர் ஆண்கள், 22 பேர் பெண்கள். இதில் கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் 10 பேர், கோவாக்சின் போட்டு கொண்டவர்கள் 53 பேர்.

ஆய்வின் போது இவர்கள் தடுப்பு மருந்து எடுத்து கொண்ட காலம், எந்த நிறுவனத்தின் தடுப்பூசி மருந்தை செலுத்தி கொண்டுள்ளார்கள் என்பதை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் பார்த்த போது, ஆய்வு செய்யப்பட்ட அனைவருக்குமே வைரஸின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களுக்கு ஏற்படும் காய்ச்சல் அறிகுறிகளை போல, இவர்களுக்கும் 1 வாரம் வரை காய்ச்சல் நீடித்துள்ளது. ஆனால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் தீவிர பாதிப்புகள் ஏதும் அவர்களிடம் கண்டறியப்படவில்லை என்று ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு தடுப்பூசி மூலம் ஆன்டிபாடிகள் கிடைத்திருந்தாலும், அவை மற்ற நோயாளிகளை பாதிப்பதை போல இவர்களையும் பாதிப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

மறு நோய் தொற்று பாதிப்புகள் நிபுணர்களையும்,பொதுமக்களையும் கவலையடையச் செய்துள்ள நேரத்தில், இந்த ஆய்வு கவனம் பெற்றுள்ளது.

இந்த ஆய்வுகளின் போது கோவிட் -19-க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி ஒரு சிலருக்கு குறைந்தது ஒரு வருடம் சிலருக்கு பல தசாப்தங்கள் நீடிக்கலாம் என்று விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே