மத்தியப் பிரதேச மாநிலம், ஸித்தி மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் மேலும் இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஸித்தி மாவட்டத்திலிருந்து சத்னாவுக்கும் சென்றுகொண்டிருந்த பேருந்து, பாட்னா கிராமம் அருகே செவ்வாய்க்கிழமை காலை ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 25 ஆண்கள், 20 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உள்பட 47 பேர் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

செவ்வாய்க்கிழமை இரவு நிறுத்தப்பட்ட மீட்புப் பணிகள் புதன்கிழமை காலை மீண்டும் தொடங்கப்பட்டன. 

இதில், மேலும் இருவரின் சடலங்கள் கால்வாயிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

இது பன்சாகர் அணை திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று ஸித்தியின் கூடுதல் காவல்துறை ஆய்வாளர் அஞ்சுலதா பாட்டில் தெரிவித்தார்.

இரண்டு உடல்களும், விபத்து நடந்த இடத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள ரேவா மாவட்டத்தில் உள்ள கோவிந்த்கர் காவல் நிலைய எல்லைக்குள் கண்டறிந்தனர்.

இதுவரை 49 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும், தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே