கேரளாவில் தங்கக் கடத்தல் மூலம் கிடைத்த பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டது என்று என்ஐஏ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தியதாக, தூதரக மக்கள் தொடர்பு அதிகாரி சரித்குமார் கைதானார்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் அதிகாரி சொப்னா சுரேஷை கொச்சியை சேர்ந்த தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று முன்தினம் பெங்களூருவில் கைது செய்தனர்.
மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சந்தீப் நாயமாநில தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) துறை முன்னாள் ஊழியரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் 3 பேர் மட்டுமின்றி எர்ணாகுளத்தை சேர்ந்த பாசில் பரீத் ஆகிய 4 பேர் மீதும் உபா சட்டத்தின் கீழ் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து சொப்னா சுரேஷ் உள்ளிட்டோரை காரிலேயே கேரளாவின் கொச்சிக்கு கொண்டு சென்றனர்.
செல்லும் வழியில் ஆலுவாவில் உள்ள மருத்துவமனையில் இருவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களை 30ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து இருவரும் கொரோனா பரிசோதனைக்காக அதற்கான மையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இந்நிலையில், தங்கக்கடத்தல் மூலம் கிடைத்த பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டது என என்ஐஏ அதிகாரிகள் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற தங்கக் கடத்தல் குறித்த ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.