#BREAKING : மத ரீதியிலான மோதலை தூண்டுவதாக “கறுப்பர் கூட்டம்” இணையதள சேனல் மீது வழக்குப்பதிவு!

சாதி, மத, இன-மொழி ரீதியிலான மோதலை தூண்டுவதாக “கறுப்பர் கூட்டம்” இணையதள சேனல் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே, கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தும் கறுப்பர் கூட்டத்தை தடைசெய்ய வேண்டும் என்று கோரி, தமிழக முதல்வருக்கு இந்து மக்கள் கட்சி கோரிக்கை மனு அளித்துள்ளது.

சீர்காழி வட்டாட்சியர் மூலம் தமிழக முதல்வருக்கு இந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை மனு ஒன்றினை அனுப்பியுள்ளனர்.

துணை வட்டாட்சியர் செந்தில்குமாரிடம் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ. சுவாமிநாதன் தலைமையில் மாவட்ட அமைப்பாளர் க.பாலாஜி, மாவட்ட செயலாளர் அரு செல்வம், நகர செயலாளர் சேகர், ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன், காழியின் செல்வன், தனசேகரன் ஆகியோர் அளித்த மனுவில்…

கறுப்பர் கூட்டம் என்ற Youtube Channel மூலம் இந்து தெய்வங்களை, வழிபாட்டு முறைகளை, புனித நூல்களை, பக்தி இலக்கியங்களை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

ஆபாச புராணம் என்ற பெயரில் சிவன், பார்வதி, முருகன், ஸ்ரீ ராமன், விநாயகர், அய்யப்பன், மாரியம்மன், சரஸ்வதி, ஆண்டாள் ஆகிய இந்து தெய்வங்களை மோசமாக, அருவருக்கத்தக்க வகையில் திட்டமிட்டு கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

இந்துக்களின் புனித நூல்களான ராமாயணம், மகாபாரதம் மற்றும் சமஸ்கிருத ஸ்லோகங்கள், கந்த சஷ்டி கவசம் உள்ளிட்ட பக்தி நூல்களையும் ஆபாசமாக விமர்சித்துள்ளனர்.

மேலும் மருத்துவம், அறிவியல், வானியல் மட்டுமல்லாமல் உலகத்திற்கே யோகக்கலையையும் ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுத்த யோகிகளையும், ரிஷி முனிவர்களையும் சொல்ல வாய் கூசும் வார்த்தைகளால் விமர்சிக்கின்றனர்.

சமீபத்தில் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியுள்ளனர்.

18ம் நூற்றாண்டில் பால தேவராய சுவாமிகளால் முருகப்பெருமான் மீது பாடப்பட்ட கந்த சஷ்டி கவசம் மிகவும் சக்தி வாய்ந்தது. நம்பிக்கையுடன் பாராயணம் செய்து வந்தால் மிகப் பெரிய பலன்கள் கிடைக்கும்.

உடலின் அனைத்து நோய்களுக்குமான அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கக் கோரி முருகப்பெருமானிடம் பிரார்த்தனை செய்வது இந்த பாடலின் சிறப்பாகும்.

மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், மூலம், பெளத்திரம், சர்க்கரை நோய் உள்ளிட்ட வியாதிகளிலிருந்து காப்பாற்றக் கோரும் அற்புதமான, சக்திவாய்ந்த வரிகள் கந்த சஷ்டி கவசத்தில் உள்ளன.

ஆனால், இதையெல்லாம் வசதியாக மறைத்து விட்டு இழிவுபடுத்த வேண்டும் என்ற தீய எண்ணத்துடன் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சித்துள்ளனர்.

என்னைப் போன்ற பல கோடி இந்துக்களின் நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தி மனங்களை புண்படுத்தும் கறுப்பர் கூட்டம் Youtube Channel-யை தடை செய்வதோடு சுரேந்தர் நடராஜன் என்ற போலி பெயரில் ஒளிந்து கொண்டு இந்து தெய்வங்களை, புனித நூல்களை, பக்தி இலக்கியங்களை இழிவுபடுத்தும் நபரையும் கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 249/2020 U/S 153,153(A)(1)(a),295(p),505(1)(b),505(2) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துள்ளனர்.

மேலும் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, “கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலில் இந்துமத சமஸ்கிருத புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் ஆபாச கருத்துகளை பொதுமக்களுக்கு புரியும் வண்ணம் ‘ஆபாச புராணம்’ எனும் தலைப்பில் எடுத்துரைத்து வந்தோம்..

இது பெரியார் காலம் தொட்டு பல முற்போக்காளர்கள் மேடைகளில் பேசிய பார்ப்பனிய எதிர்ப்பின் தொடர்ச்சி தான்.

ஆனால் தமிழ் கடவுள் முருகன் பற்றிய ‘கந்தசஷ்டி கவசம்’ பற்றிய விளக்க உரைக் காணொளி தமிழக பொதுமக்கள் பலரது மனதை புண்படுத்தி உள்ளது என்பதை நேரடியாக நமக்கு தெரிவித்துள்ளதால்.,அதற்காக கறுப்பர் கூட்டம் வருத்தம் தெரிவித்துகொள்கிறது..

அக் காணொளியை யூ டியூப் தளத்தில் இருந்து நீக்கி உள்ளோம். மேலும் கறுப்பர் கூட்டத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓர் இஸ்லாமியர் என்றும் கிறித்துவர் என்றும் பொய்யான பிரச்சாரத்தை இந்துத்துவ அமைப்புகளும்,ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளும், பாஜக ஆதரவாளர்களும் பரப்பி வருகின்றனர்.

மத கலவரத்தை தூண்டும் விதமான இச்செயலை வன்மையாக கண்டிக்கின்றோம் என்று அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே