சென்னை விமானநிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக மத்திய தொழிற்பாதுகாப்புப் படை தகவல் அளித்துள்ளது.
இந்தி தெரியாததால் கனிமொழி எம்.பி.யை இந்தியரா? என கேள்வி எழுப்பியதால் பெரும் சர்ச்சை கிளம்பியது. இதுகுறித்து, திமுக எம்பி கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னை விமான நிலையத்தில் இருந்த சி.ஐ.எஸ்.எப் ஊழியர் ஒருவர் ஹிந்தியில் கேள்வி கேட்டதாகவும் எனக்கு இந்தி தெரியாது என்பதால் அவர் நீங்கள் இந்தியரா? எனக் கேட்டதாகவும் பதிவு செய்திருந்தார்.
இந்த பதிவுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்த கருத்துக்கள் பதிவாகி வந்தன. இது குறித்து, திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தி தெரியாது என்று சொன்னதால், ‘நீங்கள் இந்தியரா?’ என்று விமானநிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கனிமொழியை பார்த்துக் கேட்டுள்ளார்.
இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”-யாவா? பன்முகத்தன்மைக்கு புதைகுழி தோண்டுகிறவர்களே அதில் புதையுண்டு போவார்கள் எனப் பதிவிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து கனிமொழியிடம் கேள்வி எழுப்பிய பெண் காவலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

