அரசியல் கூட்டங்களால் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு – சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி..!!

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், இனி மக்கள் அலட்சியமாக இருக்க கூடாது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் உச்சகட்ட எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை எழும்பூரில் சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ” கொரோனாவை தடுக்க தேவையான அனைத்து வசதியும் தமிழகத்தில் உள்ளது.

மேலைநாடுகளை போலவே மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் கடுமையாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து கொரோனா வைரஸ் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும்19 மாநிலங்களில் ஒரு மாநிலமாக தமிழகமும் உள்ளது. 

இவை மீண்டும் எங்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கேரளா மற்றும் கர்நாடகா, பஞ்சாப், குஜராத் போன்ற மாநிலத்தில் கொரோனா அதிகரித்து வருகிறது.

மக்களிடம் கொரோனா விவகாரத்தில் பெரிய அளவிலான அஜாக்கிரதை இருக்கிறது. திருமணம், பிறந்தநாள் விழாக்கள், துக்க நிகழ்வுகள் போன்றவை மூலமாக கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வந்தது.

தற்போது, தேர்தல் காலம் என்பதால் தேர்தல் பிரச்சார கூட்டங்கள் மூலமாகவும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.

வெளியே செல்லும் பொதுமக்கள், நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் களங்களில் உள்ளவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

காய்ச்சல் இருந்தால் மருத்துவமனைக்கு உடனடியாக செல்ல வேண்டும். சந்தை, பொதுப்போக்குவரத்து, கூட்டங்கள் போன்ற இடங்களுக்கு செல்லும் மக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

இனி வரும் நாட்களில் தடுப்பூசி மக்கள் அதிகளவு செலுத்திக்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதி வழங்கிஉள்ளவர்கள் கட்டாயம் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுங்கள். மக்கள் தயவு செய்து பாதுகாப்பாக இருங்கள்.

அலட்சியம் காண்பிக்க வேண்டாம்.

நோய்க்கான அறிகுறி இருந்தால் மருத்துவமனைக்கு செல்லுங்கள். மாவட்ட ஆட்சியர்களுக்கு கொரோனா தடுப்பு மையங்களை மீண்டும் தொடங்க அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

மக்கள் கவனக்குறைவாக இருந்தால் கொரோனா வைரஸ் கட்டாயம் பரவும். பொதுமக்களிடம் ஒத்துழைப்பு இருந்ததால் மட்டுமே டெங்கு நோய் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு ஒழிக்கப்பட்டது.

கடந்த நவம்பருக்கு பின்னர் எப்படி கொரோனா ஒழிக்கப்பட்டதோ, அதே ஒத்துழைப்பு மீண்டும் மக்கள் வழங்க வேண்டும்.

முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்பது சுகாதாரத்துறையின் நோக்கம் இல்லை. ஆனால், அபராதம் விதித்தால்தான் மக்கள் முகக்கவசம் அணிகிறார்கள் என்ற அடிப்படையில் அபராதம் விதிக்க வேண்டியது கட்டாயமாகிறது.

கொரோனாவிற்கு ஆண், பெண், குழந்தைகள், பெரியவர்கள் என்று பாகுபாடு கிடையாது. 5 க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றாக கூடினாலே முகக்கவசம் அணிந்துகொள்ளுங்கள் ” என்று தெரிவித்தார்.

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே