இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 84 ஆயிரம் பேர் வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 லட்சத்தை கடந்துள்ளது.
இப்போது உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ள இந்தியா, விரைவில் இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசிலை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் இப்போது உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது.
நியூசிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் முழுவதுமாக தொற்றில் இருந்து மீண்டுவிட்டதாக கூறினாலும், அடுத்த சில நாட்களிலேயே புதிய பாதிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுகிறது.
தடுப்பூசி மட்டும் தான் நோய் பரவலைத் தடுக்க ஒரே வழி என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவிலும் கரோனா தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளது.
நவம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என இந்திய மருந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தெரிவித்துள்ளது.
அதில் ஒரே நாளில் 83,883 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 1043 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்டவர்களின் என்ணிக்கை 38 லட்சத்து 53 ஆயிரமாக உள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 376 ஆக உள்ளது.
இதுவரை மொத்தமாக 29 லட்சத்து 70 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மட்டும் 69 ஆயிரம் பேர் வரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் 8 லட்சத்து 15 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா பரிசோதனை செய்யும் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 4 கோடியே 55 லட்சம் பேர் வரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.