விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.. ‘தளபதி 65′ குறித்து பேசிய பூஜா ஹெக்டே

மீண்டும் தமிழில் நடிக்க ஆர்வத்துடன் காத்திருப்பதாக நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.

2012-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படத்தில் நாயகியாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார்.

பிரபாஸ் உடன் ராதே ஸ்யாம், சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக தளபதி 65 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இதுகுறித்து பேட்டியளித்திருக்கும் நடிகை பூஜா ஹெக்டே, “மீண்டும் தமிழில் நடிக்க ஆர்வமாக காத்திருக்கிறேன். விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்று பல நாள் நினைத்திருக்கிறேன். இந்தப் படத்தின் மூலம் அது நடந்தால் மகிழ்ச்சி. விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார். பூஜா ஹெக்டே தளபதி 65 படத்தில் நடித்தால் 8 வருடங்களுக்குப் பின் அவர் மீண்டும் தமிழில் நடிக்கும் படமாக அது அமையும்.

மாஸ்டர் படத்தை அடுத்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இன்னும் டைட்டில் அறிவிக்கப்படாத இந்தப் படத்தை ‘தளபதி 65’ என்றே அனைவரும் தற்காலிகமாக அழைத்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.மனோஜ் பரஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.விரைவில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே