கரோனா தொற்று பாதிப்பு இருப்பதை வீட்டிலேயே உறுதி செய்யும் வகையில் ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் பரிசோதனை கருவியின் பயன்பாட்டுக்கு புதன்கிழமை முதல் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
கரோனா தொற்று பாதிப்பு இருப்பதை விரைந்து கண்டறியும் ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட் என்ற கருவியை மகாராஷ்டிரம் மாநிலம் புனேவைச் சேர்ந்த மைலேப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் லிமிடெட் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
ஒரு பரிசோதனை கருவியின் விலை ரூ.250 ஆகும் 15 நிமிடங்களுக்குள் பரிசோசனை முடிவுகளை தெரிந்துகொள்ள முடியும்.
இந்த கருவியின் மூலம் மூக்கில் உள்ள சளி மாதிரியை எடுத்து தொற்று இருப்பதை வீட்டிலேயே உறுதி செய்யும் வகையில் இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த கருவியின் பரிசோதனையை எல்லோரும் கண்மூடித்தனமாக செய்து விடக்கூடாது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
மேலும் கரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டோருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் மட்டும் இக்கருவியை பயன்படுத்தலாம் என அறிவுறுத்தியுள்ளது.
இந்த கருவியின் மூலம் ஒருவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தால் அது உறுதியாக பாசிட்டிவ் என்றே கருதப்படும் மீண்டும் பரிசோதனை தேவையில்லை என்றும் தொற்று உறுதி செயயப்பட்டவர்கள் ஐசிஎம்ஆர் மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் நெறிமுறையின்படி வீட்டு தனிமை மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது.
ஆனால் தொற்று அறிகுறிகள் இருந்து இந்த கருவி மூலம் சோதனை செய்து அதில் நெகட்டிவ் என வந்தால் தற்போது வழக்கமாக செய்யப்படும் ஆர்டிபிசிஆர் சோதனையை மேற்கொள்ள வேண்டும்.
இந்த பரிசோதனையை மேற்கொள்வதற்கு வசதியாக மொபைல் ஆப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.