தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், இன்று தனது 50-வது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். திரைத்துறையில் எந்த பின்புலமுமின்றி தனது விடாமுயற்சியால் மட்டுமே இன்று உச்சத்தை  எட்டியுள்ளார்.

‘அஜித்’… இந்த மூன்றெழுத்து பெயர் திரையில் தோன்றினால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளக்கும்.

இவரது முகத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும்.

25 ஆண்டுகள்.. 58 படங்கள் என இன்று தென்னிந்திய சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாக உருமாறியிருக்கிறார்.

1993-ல் தமிழில் அமராவதி படத்தின் மூலம் அறிமுகமான அஜித்துக்கு முதல் படத்திலேயே தமிழ் சினிமா சிவப்பு கம்பளம் விரித்துவிடவில்லை.

தமிழ் உச்சரிப்பு சரியாக இல்லை போன்ற விமர்சனங்களும் எழுந்தன.

ஆனால் அதற்காக துவண்டு விடாமல் ஆசை, காதல் கோட்டை என கொஞ்ச கொஞ்சமாக முன்னேறிய அஜித்துக்கு காதல் மன்னன், வாலி போன்ற படங்கள் நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தந்தன.

தொடர்ந்து தீனா, சிட்டிசன் என அடுத்தடுத்து பல வெற்றிகளைக் கொடுத்த அஜித், எம்.ஜி.ஆர், ரஜினி வரிசையில் தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்த்தியாக உருவெடுத்தார்.

எனினும் அஜித்தின் திரை பயணம் சறுக்கலையும் சந்தித்தது. தொடர் தோல்விகள், கார் ரேஸிங்கில் கூடுதல் கவனம், அதில் ஏற்பட்ட விபத்தால் உடல் எடை அதிகரித்தல் என 2003 முதல் 2006 வரையிலான காலக்கட்டம் அஜித்துக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் சோதனை காலமாக அமைந்தது.

ஒவ்வொரு முறை வீழும் போதும் ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வந்து முன்பிருந்ததை விட பெரிய ஹிட் கொடுப்பது அஜித்தின் ஸ்டைல்.

அந்தவகையில் 2007-ம் ஆண்டு பில்லா படத்தின் மூலம் அதிரடியாக கம்பேக் கொடுத்து தான் விட்டுச்சென்ற சிம்மாசனத்தில் மீண்டும் ஒய்யாரமாக ஏறி அமர்ந்தார் அஜித்.

ஆரம்பம் முதலே அஜித்தை பிடிக்க அவரது ரசிகர்கள் சொல்லும் காரணங்களில் முதன்மையானது அவருடைய தன்னம்பிக்கையும் துணிச்சலும்.

ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு ரசிகர் மன்றங்களை கலைத்து, கலைஞர் பாராட்டு விழாவில் தன்னை வற்புறுத்தி வர சொன்னதாக பேசியது என அஜித்தின் இந்த நடவடிக்கைகள் அவரது துணிச்சலுக்கு எடுத்துக்காட்டுகள்.

நடிப்பைத் தாண்டி விளையாட்டுத் துறையிலும் சாம்பியனாகவே அஜித் வலம்வருகிறார்.

முறைப்படி கார் பந்தயத்தில் பங்கேற்ற அவர், 2002-ம் ஆண்டு இந்திய அளவில் நடைபெற்ற ஃபார்முலா மாருதி சாம்பியன்ஷிப் போட்டியில் 4-ம் இடம் பிடித்து அசத்தினார்.

அதேபோல் சென்னை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உள்ள வான்வெளி ஆராய்ச்சி மையமான தக்‌ஷா குழுவின் ஆலோசகராக அஜித் நியமிக்கப்பட்டார்.

திரைத்துறையில் எந்தவித பின்புலமுமின்றி அறிமுகமாகி இன்று தனது விடா முயற்சியால் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியிருக்கிறார் அஜித்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே