ஈஷா மஹாசிவராத்திரியை தடை செய்ய கோரிக்கை – நிராகரித்த பசுமை தீர்ப்பாயம்..!!

ஈஷா யோகா மையம் நடத்தும் மஹா சிவராத்திரி விழாவுக்கு தடை விதிக்க மறுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் சம்பந்தப்பட்ட துறைகளில் உரிய அனுமதி பெற்று மஹா சிவராத்திரி விழாவை தொடர்ந்து நடத்தலாம் என தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா கோலாகலமாக நடந்து வருகிறது.

இந்த விழாவில் உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வருகின்றனர்.

மேலும், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப்பட நடிகர், நடிகைகள், பின்னணி பாடகர்கள் பங்கேற்று, ஆடல் பாடலுடன் நிகழ்ச்சி நடைபெறும்.

சுற்றுசூழல் மாசு உள்ளிட்ட காரணங்களை முன் வைத்து இந்த விழாவிற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.

விழாவிற்கு தடைவிதிக்க மறுத்த பசுமை தீர்ப்பாயம், சம்பந்தப்பட்ட துறைகளில் உரிய அனுமதி பெற்று மஹா சிவராத்திரி விழாவை தொடர்ந்து நடத்தலாம் எனவும் ஒலி மாசு ஏற்படுத்தாமல் நடத்த வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

இது குறித்து கோவை ஈஷா யோகா மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஈஷா யோகா மையம் ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழாவை கடந்த 25 ஆண்டுகளாக வெகு விமர்சியாக கொண்டாடி வருகிறது.

இந்த விழாவில் சாதி, மத, இன வேறுபாடுகளை கடந்து பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர்.

இந்தநிலையில் ஈஷா யோகா மையம் நடத்தும் மஹா சிவராத்திரி விழாவை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என்ற நோக்கத்துடன் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து விட்டது.

வழக்கம்போல் சம்பந்தப்பட்ட துறைகளில் உரிய அனுமதி பெற்று மகா சிவராத்திரி விழாவை தொடர்ந்து நடத்தலாம் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த தீர்ப்பை ஈஷா மையம் வரவேற்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே