லெக் பீஸ் இல்லாமலா சிக்கன் பிரியாணி தருவ..?! – ஓட்டல் ஊழியரை தாக்கிய வாடிக்கையாளர்..!

பூந்தமல்லி அருகே ஓட்டலில் சாப்பிட வாங்கிச் சென்ற சிக்கன் எலும்பாக இல்லாததால் சப்ளையரை தாக்கிய வாடிக்கையாளர்… கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை பூவிருந்தவல்லி அருகே கரையான் சாவடியில் இருந்து ஆவடி செல்லும் சாலையில் சென்னீர்குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஓட்டல் ஒன்று உள்ளது.

இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவர் வீட்டிற்கு சிக்கன் வாங்கிச் சென்று சாப்பிட்டபோது கறியில் எலும்பு இல்லை என்று கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த கார்த்தி தனது நண்பருடன் ஓட்டலுக்கு வந்து, வாங்கிச் சென்ற சிக்கனில் எலும்பு ஏதும் இல்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் அந்த கடையில் சப்ளை செய்து கொண்டிருந்த ஊழியர் சாகுல் அமீது என்பவரின் கன்னத்தில் பளார், பளார் என அறைந்ததில் அந்த ஊழியர் நிலை குலைந்து போனார்.

இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. பின்னர் அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

கன்னத்தில் அறைந்ததில் சாகுல் அமீதுக்கு காது கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து கடை உரிமையாளர் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் பூந்தமல்லி போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு தலைமறைவாக உள்ள நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஓட்டலில் இருந்து சாப்பிட வாங்கி சென்ற சிக்கனில் எலும்பு இல்லாததால் ஓட்டல் ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே