முஸ்லீம் லீக், மமகவுடன் திமுக இன்று தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை!

திமுக கூட்டணி தொகுதிப் பங்கீட்டு குழுவுடன், திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. இதன்படி திமுக கூட்டணியில், இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் கே.என்.நேரு, பெரியசாமி, பொன்முடி உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீட்டு குழுவுடன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை அவசர ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மனித நேய மக்கள் கட்சிக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த பட்டியலுடன் திமுக அவ்விரு கட்சிகளின் தலைவர்களும் சந்திக்க உள்ளனர். இதேபோன்று நாளை மதிமுக , விசிகவிற்கு கூட்டணி பேச்சுவார்த்தையில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே