காவல்துறையை பெருமைப்படுத்தி 5 படம் எடுத்ததற்காக இன்று மிகமிக வேதனைப்படுகிறேன் என்று இயக்குநர் ஹரி கூறியுள்ளார்.
சாத்தான்குளத்தில் ஊரடங்கு காலத்தில் கூடுதல் நேரம் கடை திறந்திருந்ததாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ஜூன் 23 ஆம் தேதி அவர்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
காவல்துறையின் இந்தச் செயலைக் கண்டித்து பலரும் தங்களது கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர்.
#JusticeForJeyarajAndBennicks என்ற ஹேஷ்டேக்கை டிவிட்டரில் டிரெண்ட் செய்து அதன் மூலம் விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரபலங்கள், திரைத்துறையினர், சாதாரண மக்கள் என அனைவரும் காவல்துறையினர் மீது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்
இந்நிலையில் இயக்குநர் ஹரி இந்த சம்பத்தற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் “சாத்தான்குளம் சம்பவம்போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிடக்கூடாது. அதற்கு ஒரேவழி சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே.
காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்த துறையையே இன்று களங்கப்படுத்தி உள்ளது.
காவல்துறையை பெருமைப்படுத்து 5 படம் எடுத்ததற்காக இன்று மிகமிக வேதனைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சாத்தான்குளம் சம்பவம் குறித்து இயக்குநர் ஹரி அறிக்கை
‘சாமி’, ‘சிங்கம்’, ‘சிங்கம் 2’, ‘சிங்கம் 3’, ‘சாமி ஸ்கொயர்’ என காவல்துறையை மையமாக வைத்து 5 படங்களை இயக்கியுள்ளார் இயக்குநர் ஹரி.
இதில் 3 படங்களில் சூர்யாவும் 2 படங்களில் விக்ரமும் நடித்துள்ளனர்.