தஞ்சாவூரில் நூறு ஆண்டுகள் பழமையான மூன்று கட்டிடங்களைக் கையகப்படுத்திய மாநகராட்சி..!!

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பழைமையான யூனியன் கிளப், காவேரி லாட்ஜ், ஜூபிடர் திரையரங்கம் ஆகியவற்றை மாநகராட்சி நிர்வாகம் செவ்வாய்க்கிழமை காலை கையகப்படுத்தியது.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே நூறாண்டுகள் கடந்த யூனியன் கிளப், காவிரி லாட்ஜ், ஜூபிடர் திரையரங்கம் ஆகியவை செயல்பட்டு வந்தது. இவற்றில் காவேரி லாட்ஜ், ஜூபிடர் திரையரங்கத்துக்கான 99 ஆண்டுகள் குத்தகை காலம் இந்தாண்டு மே மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. இதேபோல 100 ஆண்டுகள் கடந்த யூனியன் கிளப்புக்கு ஆவணங்கள் எதுவும் முறையாக இல்லை என கூறப்படுகிறது.

எனவே ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றுதல் சட்டத்தின்கீழ் அகற்றிக் கொள்ளுமாறு தொடர்புடைய நிர்வாகங்களிடம் மாநகராட்சி அலுவலர்கள் சில மாதங்களுக்கு முன்பு அறிவுறுத்தினர். என்றாலும் இந்த இடங்கள் காலி செய்யப்படாமல் இருந்து வந்தது.

எனவே, ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றுதல் சட்டத்தின் கீழ் இந்த கட்டடங்களைக் கையகப்படுத்தியதற்கான நோட்டீஸை அவற்றின் நுழைவுவாயில் கதவில் ஒட்டுமாறு அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் க. சரவணகுமார் உத்தரவிட்டார்.

இதன்படி, மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி செயற்பொறியாளர் எம். ராஜசேகரன், அலுவலர்கள், பணியாளர்கள் ஜுபிடர் திரையரங்கத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை சென்று, அதன் வாயில் கதவில் நோட்டீஸ் ஒட்டினர். அதில் “தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமான மேற்கண்ட இடம் தமிழ்நாடு பொது வளாகங்கள் (ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றுதல்) 1975-இன் படி தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மாநகராட்சி வசம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இவ்விடத்தில் நுழைபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தகவலை பொதுமக்களுக்கு அறிவிக்கும் விதமாக தண்டோரா போடப்பட்டது.

இதையடுத்து, காவேரி லாட்ஜ் வாசல் கதவிலும், யூனியன் கிளப் வாசல் கதவிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதையொட்டி காவல் துறையினர் பாதுகாப்புக்காக அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதேபோல காவேரி லாட்ஜ் முன்புறம் உள்ள கடைகளும் தீபாவளி பண்டிகைக்கு பின்பு அகற்றப்பட உள்ளதாக மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

கையகப்படுத்தப்பட்ட யூனியன் கிளப் 29,743 சதுர அடியும், காவேரி லாட்ஜ் 40,390 சதுர அடியும், ஜூபிடர் திரையரங்கம் 13,605 சதுர அடியும் பரப்பளவு கொண்டவை.

யூனியன் கிளப் உள்ள இடத்தில் 1872-ஆம் ஆண்டில் அப்போதைய நகராட்சி நிர்வாகம் சார்பில் நூலகம் மற்றும் வாசக சாலை தொடங்கப்பட்டது. அதன்பிறகு கிளப் ஆக மாற்றப்பட்டது. இந்த கிளப்பில் 1919 ஆம் ஆண்டில் ரவீந்திரநாத் தாகூர் உரையாற்றியுள்ளார். இக்கிளப்பில் அக்கால ஜமீன்தார்கள், மிராசுதாரர்கள் முக்கியப் பொறுப்புகளில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே