2021 வரை கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பில்லை – WHO

2021 ஆண்டு தொடக்கத்தில்தான் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகையே மிரட்டும் கொரோனாவால் 1,53,79,791 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6,30,312 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் சூழலில், தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

ஒரு சில தடுப்பு மருந்துகள், பரிசோதனையில் படிப்படியாக வெற்றியடைந்து வருவது நம்பிக்கையளிக்கும் விதமாக இருக்கிறது.

மனிதர்களுக்கும் தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்து வருகின்றனர். தடுப்பூசி குறித்த நல்ல தகவல் விரைவில் வரும் உலக தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசியின் பயன்பாட்டை 2021ம் ஆண்டு தொடக்கம் வரை எதிர்பார்க்க முடியாது என உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்ட தலைவர் மைக்கேல் ரியான் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை தயாரிப்பதில் ஆராய்ச்சியாளர்கள் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசி விநியோகம் நியாயமான முறையில் இருப்பதை உலக சுகாதார அமைப்பு உறுதி செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ‘பல தடுப்பூசிகள் தற்போது மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருக்கின்றன. இதுவரை எதுவும் தோல்வி அடையவில்லை. பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் திறனில் அவை நன்றாக செயல்படுகின்றன.

அடுத்த ஆண்டுதான் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறந்த தடுப்பூசிகளின் முன்னேற்றத்திற்கும், உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்கும் உலக சுகாதார அமைப்பு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

இந்த தொற்றுநோய்க்கான தடுப்பூசி எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் பொதுவானதாக இருக்கும்.

சமூகப் பரவல் இருக்கும் பகுதிகளில் பள்ளிகளை மீண்டும் திறப்பதில் அரசு அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தொற்றுநோய் பரவலை குறைத்த பிறகு பள்ளிகளை திறக்கலாம்’ என தெரிவித்துள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே