தமிழகம் முழுவதும் நாளையும் அனைத்து ரேஷன் கடைகளிலும் கொரோனா நிவாரணம் வழங்கப்படும்..!!

நியாயவிலைக் கடைகளில் நாளையும் கரோனா நிவாரண நிதி பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வரால், தமிழகத்தில், கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள சில தவிர்க்க இயலாத கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களைப் பாதுகாத்து, ஆறுதல் அளிக்கும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் முதல் தவணை கரோனா நிவாரண உதவியாக ரூ.2000/- வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக முதல்வரால் 10.05.2021 அன்று முதல் தவணை நிவாரணத் தொகை ரூ.2000/- வழங்குவதற்கான பணி தொடங்கிவைக்கப்பட்டது.

அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் முதல் தவணை கரோனா நிவாரண உதவித் தொகை ரூ.2000/-ஐ 15.05.2021 அன்று முதல் நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கிட குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நேர்வில், தமிழகத்தில் மேலும் கரோனா பரவலை தடுக்கும் நோக்கில் முதல்வரால், வரும் 16.05.2021 மற்றும் 23.05.2021 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கனவே 16.05.2021 அன்றும் முதல் தவணை கரோனா நிவாரணத் தொகை ரூ.2000/- வழங்குவதற்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி 16.05.2021 அன்று நிவாரண உதவி பெறுவதற்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் மட்டும், கரோனா நிவாரணத் தொகை ரூ.2000/-த்தினை 16.05.2021 அன்று காலை 8.00 மணி முதல் பகல் 12.00 பணி வரை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், நியாயவிலைக் கடைகளில் நிவாரணத் தொகை வழங்கப்படும் பொழுது, முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை தவறாமல் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே