புதுச்சேரியில் காங்கிரஸ் – திமுக தொகுதி பங்கீடு முடிவானது..!!

புதுச்சேரியில் காங்கிரஸ் – திமுக இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

புதுச்சேரி அரசியல் களம் ஆட்சி கவிழ்ப்புக்கு பிறகு இன்னும் சூடுபிடித்தது. ஆட்சி கவிழ்ப்புக்கு காரணமாக இருந்த கட்சிகளே கூட்டணி சேர்வதில் இழுபறி நீடித்தது.

ஆனால் ஒருவழியாக என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக கூட்டணி இறுதியாக தொகுதிகளை பங்கிட்டு கொண்டன.

இந்நிலையில் காங்கிரஸ் – திமுக இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடித்தது.

புதுச்சேரியில் உடன்பாடு எட்டப்படாததால் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்து இருகட்சி நிர்வாகிகளும் ஆலோசனை நடத்தினர்.

புதுச்சேரியில் காங்கிரஸ் – திமுக கூட்டணி நீடிக்குமா என்ற சந்தேகம் கூட ஒரு கட்டத்தில் எழுந்தது. 

காங்கிரஸ் இல்லாமல் போட்டியிட்டால் வெற்றி பெறுவது சாத்தியமா என்று மு.க.ஸ்டாலின் கேட்டதாகவும், அதற்கு திமுக நிர்வாகிகள் அமோக வெற்றி பெறலாம் என கூறியதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு காங்கிரஸ் – திமுக தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரியில் 15 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், 13 தொகுதிகளில் திமுகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலா ஒரு இடத்திலும் போட்டியிடுகின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே