தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் செப்டம்பர் 8-ஆம் தேதி மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி செப்டம்பர் 8-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டு, மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.
செப்டம்பர் 7 முதல் முழு அளவில் பேருந்து போக்குவரத்துக்கும், ரயில் போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டு புதிய பல தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துவது முக்கியத்துவம் பெறுவதாக உள்ளது.
புதிய தளர்வுகளால் கரோனா தொற்று அதிகரிக்கும்பட்சத்தில் அதனை எவ்வாறு கையாள்வது, மருத்துவ வசதிகளை அதிகரிப்பது தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.
இதுவரை புறநகர் ரயில் சேவை தொடங்குவது குறித்து தமிழக அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
அது பற்றியும் மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல்வர் ஆலோசித்து அறிவிப்பினை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.