தாமல் வெங்கடப்பா நாயக்கர் என்பவரிடம் இருந்து கிழக்கு இந்தியக் கம்பெனி சிறு நிலத்தை வாங்கி நகரை உருவாக்கியதாக வரலாறு.
அதனை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது சென்னை தினம்.
செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் மாளிகை, நேப்பியர் பாலம், மெட்ராஸ் போர் கல்லறை, அரசு அருங்காட்சியகம், சாந்தோம் தேவாலயம் போன்றவை சென்னையின் பழமையை நம் கண்முன்னே நிறுத்துகின்றன.
சென்னையின் மிக முக்கியமான பெருமை, விரிந்து பரந்த வங்காள விரிகுடாக் கடல்.
ஆசியாவின் இரண்டாவது பெரிய கடற்கரையாக கருதப்படும் மெரீனாவின் மணற்பரப்பு காண்போரை பிரமிக்க வைக்கிறது.
மும்பை, டெல்லி போன்ற பிற நகரங்களில் காணப்படும் மக்கள் நெரிசலை சென்னையில் பார்க்க முடியாது.
பேருந்துகள், மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள், பறக்கும் ரயில்கள் இருப்பதால் நகரின் ஒரு மூலையில் இருந்து இன்னொரு பகுதிக்கு எளிதில் சென்றடைய முடியும்.
சொந்த வாகனங்கள் வைத்திருப்போர் அங்கும் இங்கும் பறந்துகொண்டிருக்க, தனியார் வாகனங்களும் இரவுபகலாக நகர் முழுவதும் அணிவகுத்துச் செல்கின்றன.
கையேந்தி பவன் முதல் ஐந்து நட்சத்திர உணவு விடுதிகள் வரை இருப்பதால், காலையில்இருந்து இரவு வரை உணவுக்கு பிரச்சனையில்லை.
வாய்க்கு ருசிதரும் தின்பண்ட விற்பனைக் கடைகள், தேநீர்க் கடைகள், குளிர்பானக் கடைகள், பழக்கடைகளுக்குக் குறைவில்லை.. ….
பட்டணம்தான் போகலாமடி பணம் காசு சேர்க்கலாமடி என்ற வரிகளுக்கு ஏற்ப, சென்னைப் பட்டினம் பலருக்கும் தொழில், வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
நொடித்து போக்கும் தொழிலதிபர்களும் அதில் இருந்து மீண்டு வர நம்பிக்கை அளிக்கிறது இந்த மாநகரம்.
எல்லாச் சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ள சென்னை நகரம், இன்று 381 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது.
கொரோனா ஊரடங்கால் முடங்கிக் கிடந்த சென்னை, விரைவில் உற்சாகத்துடன் மீண்டெழும் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கிறது.
தூய்மையையும், அமைதியையும் பேணிக்காத்து, சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பின்றி, கொரோனா போன்ற கொடிய தொற்று நோய்கள் குறித்த எச்சரிக்கை உணர்வுடன் அடுத்து வரும் சந்ததியிடம் அப்படியே ஒப்படைக்க வேண்டியது சென்னைவாசிகளின் தலையாய கடமையாகும்.