கொரோனா 2 ஆவது அலை பரவினால் மீண்டும் முழு முடக்கத்திற்கு வாய்ப்பு: மாஃபா பாண்டியராஜன்

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவினால், மீண்டும் முழு முடக்கம் அமல்படுத்தப்பட வாய்ப்பிருப்பதாக அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் தொற்று பரவல் நாள்தோறும் 300 என்ற அளவிலேயே கட்டுக்குள் இருந்து வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாகவே மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதாவது சுமார் மூன்று வாரங்களில் ஒரு நாள் பாதிப்பு மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் புதிதாக 945 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆவடியில் போட்டியிடும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அத்தொகுதியில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் தேர்தல் பணிமனையை தொடக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேர்தல் அறிக்கையில் கொடுத்துள்ள வாக்குறுதிகளை பத்தாண்டு கால ஆட்சியில் ஏன் நிறைவேற்றவில்லை என்று மக்கள் கேட்பதில் நியாயம் இருப்பதை ஒப்புக்கொண்டார்.

ஆனாலும், கடந்த தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை அதிமுக அரசு நிறைவேற்றி இருப்பதாகவும் அமைச்சர் கூறினார். கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே